தவெக: ``திமுக தோல்விக்கு காரணம் இருவர் மட்டுமே! அதிமுகவின் பதவி வெறி.!" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

May 15, 2026 - 10:31
0
தவெக: ``திமுக தோல்விக்கு காரணம் இருவர் மட்டுமே! அதிமுகவின் பதவி வெறி.!" - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்திருக்கும் தவெக முதல் சட்டமன்றக் கூட்டத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்காக நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாக தவெக வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பொதுக்கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினார்.

அதில் உரையாற்றிய அவர், ``தி.மு.க தற்போது சந்தித்துள்ள அரசியல் சரிவு மற்றும் தேர்தல் தோல்விக்கு இரண்டே நபர்கள்தான் காரணம். ஒருவர் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், மற்றொருவர் உதயநிதி ஸ்டாலின். கலைஞர் கருணாநிதி ரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்த்த ஒரு மாபெரும் இயக்கத்தை, அவரது வாரிசுகள் அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள்.

உதயநிதி, ஸ்டாலின்

தமிழக வெற்றிக் கழகம் "குதிரைபேர அரசியல்" செய்வதாக உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால், உண்மையில், நிஜமான குதிரைபேரத்தை நடத்தியது தி.மு.க-தான். தவெக தலைவர் விஜய் முதல்வராவதைத் தடுப்பதற்காக, தி.மு.க தனது பரம எதிரியான அ.தி.மு.க-வுடன் கைகோர்க்கத் துணிந்தது.

உதயநிதி ஸ்டாலினும், எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனும், பாஷ்யம் குழுமத்தின் தொழிலதிபர் முன்னிலையில் ரகசியச் சந்திப்பு நடந்தது. தவெக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, அ.தி.மு.க-விற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வர் ஆக்க தி.மு.க தரப்பு முயன்றது.

இந்தத் திட்டத்தில் முதல்வரின் மருமகன் சபரீசனுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இந்த "துரோக அரசியலுக்கு" இடதுசாரி கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எம்.ஏ. பேபி போன்றவர்கள், தி.மு.க - அ.தி.மு.க இணைந்து பா.ஜ.கவின் நிழலில் ஆட்சி அமைக்கும் முயற்சியை வன்மையாக எதிர்த்ததாலேயே இந்தத் திட்டம் தோல்வியடைந்தது.

தமிழக அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி த.வெ.க தலைவர் விஜய்-க்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி
அதிமுக எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் இருந்து வந்த அந்த ஒற்றைக் குரல், தமிழ்நாடு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின்னரே காங்கிரஸ் கட்சியின் மாநில நிலைப்பாட்டில் தெளிவு பிறந்தது.

சி.வி. சண்முகம் போன்ற அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் ஏன் அதிருப்தி அடைந்தார்கள் என்பதற்கும் இதுவே காரணம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் தி.மு.க-வை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கட்சி, இன்று பதவி வெறிக்காக அதே தி.மு.க-வுடன் கைகோர்க்க முயன்றது அக்கட்சியின் கொள்கைக்கே எதிரானது." எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User