"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

Jul 21, 2026 - 19:31
0
"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக  2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான் ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

அவரது வீட்டில் கடந்த 15-ம் தேதி மின் தடை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியத்திற்குப் புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளில் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று கலெக்டரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜோசப் வீட்டில் மின் இணைப்பைச் சரிசெய்தனர்.

இதுபற்றி ஜான் ஜோசப் கூறுகையில், "எனது வீட்டில் கடந்த 15-ம் தேதியிலிருந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுபற்றி கொல்லங்கோடு மின்சார வாரிய அலுவலகத்துக்கு நான் நேரில் சென்று அங்கிருக்கக்கூடிய புகார் புத்தகத்தில் புகாரைப் பதிவுசெய்தேன்.

மின்தடை
மின்தடை

அதுபற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதால், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொபைல் ஆப்பில் புகார் செய்தேன், அதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியம் மின்னகம் சார்பாக புகார்கள் பெறுவதற்காக ஒரு வாட்ஸ் அப் நம்பர் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த எண்ணில் வாட்ஸ் அப் மூலம் புகார் செய்தேன். அதையும் கண்டுகொள்ளவில்லை. கொல்லங்கோடு மின்சார வாரிய இளநிலை பொறியாளரின் வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொண்டு மின்சாரம் இல்லாதது குறித்து தகவல் தெரிவித்தேன்.

'நோட்டட் சார்' என எனக்கு வாட்ஸ் அப்பில் ரிப்ளே கொடுத்தார். ஆனாலும், என்னுடைய வீட்டில் மின் இணைப்பை சரிசெய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜோசப்
முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜோசப்

ஐந்து நாட்களாக வீட்டில் மின்சாரம் இல்லாததால் 6-வது நாளான நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளித்தேன். பக்கத்து வீடுகளில் எல்லாம் மின்சாரம் இருந்தது. என் வீட்டுக்கு மின்சாரம் வரும் லைனில் ஏதோ பிரச்னை என்பதை ஏற்கனவே புகாரில் பதிவு செய்திருந்தேன்.

நான் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரிகளும், ஊழியர்களும் உடனடியாக என் வீட்டுக்கு வந்து மின் இணைப்பைச் சரிசெய்தனர். வீட்டுக்கு மின் இணைப்பு வரும் சர்வீஸ் ஒயருக்கும், மின்கம்பத்தில் உள்ள லைனுக்கும் இடையே பாசிபோன்று உருவாகி இருந்ததே மின் சப்ளை வராமல் இருந்ததற்கு காரணம்.

அதைச் சரிசெய்து மீண்டும் மின் இணைப்பு கொடுத்துள்ளனர். நான் மின்சார வாரியம் மீது சில புகார்கள் அளித்ததை மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் அலட்சியமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த உடனே மின் இணைப்பைச் சரிசெய்துவிட்டனர்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User