கடலூர்: `எந்த சிலை பெரியது?’ - விநாயகர் கரைப்பதில் மோதல்; விலக்கச் சென்றவர் உயிரிழந்ததால் பதற்றம்

Sep 17, 2026 - 11:01
0
கடலூர்: `எந்த சிலை பெரியது?’ - விநாயகர் கரைப்பதில் மோதல்; விலக்கச் சென்றவர் உயிரிழந்ததால் பதற்றம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நகரம் மற்றும் கிராமப் பகுதிகள் என, பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. அதற்கு நிகராக அந்தச் சிலைகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.

கடலூர் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் இருக்கின்றன, கீழ்கவரப்பட்டு, மேல்கவரப்பட்டு கிராமங்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கடந்த 14-ம் தேதி இரண்டு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தங்கள் பகுதியில் பணம் வசூல் செய்து விநாயகர் சிலைகளை வைத்தனர்.

அதன்பிறகு மூன்றாவது நாளான நேற்று மாலை அந்த விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக, மினி வேனில் ஏற்றிக் கொண்டு ஆடல், பாடலுடன் தேவனாம்பட்டினம் கடற்கரைக்குச் சென்றனர். அப்போது யாருடைய விநாயகர் சிலை பெரியது என்ற விவகாரத்தில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், யார் முதலில் கரைப்பது என்று திசை திரும்பியது.

சடலமாக ராமு
சடலமாக ராமு

அந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கை கலப்பாக மாற, லேசான மோதல் ஏற்பட்டது. குறிப்பாக, கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும், மேல்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தேவு என்பவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக இரண்டு கிராமத்தினரும் களத்தில் இறங்க முயற்சிக்க, கலவரத்தை நோக்கிச் சென்றது அந்த மோதல்.

உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் வீட்டுக்குச் சென்றதும் கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷின் ஆதரவாளர்களும், உறவினர்களும் மேல்கவரப்பட்டு கிராமத்திற்குச் சென்றனர்.

அங்கு தேவு தரப்புக்கும், விக்னேஷ் தரப்புக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து கீழ்கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர், இரண்டு தரப்பினரையும் விலக்கிவிட்டு மோதலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினார். அப்போது யாரோ சிலர் இரும்புத் தடியால் அவரது தலையில் அடிக்க, ரத்தவெள்ளத்தில் அங்கேயே சுருண்டு விழுந்தார் ராமு.

உடனே அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராமு ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதையடுத்து அவரது உடல் உடற்கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். பண்ருட்டி போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ராமு
கொலை செய்யப்பட்ட ராமு

விசாரணை அதிகாரிகளிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ``விக்னேஷ் தரப்புக்கும், தேவு தரப்புக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம், விநாயகர் சிலை கரைப்பதில் மோதலாக மாறியிருக்கிறது. விக்னேஷ் குடும்பத்திற்கும், தேவு குடும்பத்திற்கும் சொத்துப் பிரச்னையில் முன் விரோதம் இருந்திருக்கிறது.

இருவரும் வெவ்வேறு பகுதிகள் என்பதால் பிரச்னை அளவில் இருந்த அவர்களின் முன் விரோதம், விநாயகர் சிலை கரைப்பதில் வெடித்திருக்கிறது. இந்தப் பிரச்னையில் எந்தத் தொடர்பும் இல்லாத, மோதலை விலக்கிவிட வந்த ராமுவை அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள்" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User