'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

Jul 21, 2026 - 17:01
0
'அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்' - தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்; ஹை அலர்ட்டில் உளவுத்துறை!

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் CJP கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தமிழகத்திலும் CJP கட்சியின் தொடர் முழக்க போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.

Cockroach Protest
Cockroach Protest

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனக் கோரி கல்வியாளர் சோனம் வாங்சுக் 20 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். சோனம் வாங்சுக்கோடு காக்ரோச் ஜனதா பார்ட்டியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சோனம் வாங்சுக்கை டெல்லி காவல்துறை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்க, போராட்டம் இன்னும் தீவிரமானது. மாணவர்களும் இளைஞர்களும் ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கில் கூட ஆரம்பித்தனர். நேற்று ஜந்தர் மந்தரிலிருந்து பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆனால், இன்று மீண்டும் ஜந்தர் மந்தரை நோக்கி இளைஞர்களும் மாணவர்களும் வரத் தொடங்கியிருக்கின்றனர்.

Cockroach Protest
Cockroach Protest

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்தும் போராடியவர்களுக்கு ஆதரவுக்கும் நேற்று முதல் தமிழ்நாடு காக்ரோச் பார்ட்டியினர் சென்னையில் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். நேற்று மாலை சைதாப்பேட்டை பனகல் பார்க் அருகே காக்ரோச் பார்ட்டியினர் போராட்டத்தை தொடங்கினர். ஒரு மணி நேரத்தில் காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து கலைத்தனர். இந்நிலையில், நேற்றிரவு முதல் தி.நகரிலுள்ள சி.பி.ஐ கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் போராட்டத்தை தொடங்கினர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்ரோச் பார்ட்டியை சேர்ந்த மணிகண்டனிடன் பேசினோம், 'நீட் தேர்வு எல்லாருக்கும் சம வாய்ப்புகளை வழங்கவில்லை. இன்னார் மட்டும் மருத்துவப்படிப்பை படித்தால் போதும் எனும் நிலையை உருவாக்குகிறது. அடிப்படையிலேயே அறத்துக்கும் சமூக நீதிக்கும் எதிராக இருக்கும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதைப் பற்றி கவலைப்படாமல் அப்படியே பதவியில் தொடர்கிறார். அவர் பதவி விலக வேண்டும்.

மேலும், நீட்டால் இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இதுதான் எங்களின் பிரதான கோரிக்கைகள். இந்த நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அமைதியாக போராடி வந்த இளைஞர்கள் மீது தடியடி வன்முறையை நிகழ்த்தியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது' என்றார்.

Cockroach Protest
Cockroach Protest

'நீட் வேண்டாம் என்றுதான் போராடுகிறோம். ஆனால், எங்களின் போராட்டத்துக்கு தமிழக காவல்துறை எங்களுக்கு அத்தனை இடையூறுகளை கொடுக்கிறது. முதல்வர் விஜய் எங்களுக்கு ஆதரவாக இல்லையென்றாலும் போராட்டத்துக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கலாம். தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை இந்தப் போராட்டம் ஓயப்போவதில்லை' என்றார் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் ஸ்டெலினா.

டெல்லியில் காக்ரோச் பார்ட்டி என்ன முடிவெடுக்கிறதோ அதையே நாங்களும் செய்வோம். அங்கே போராட்டம் முடியும் வரை இங்கேயும் போராட்டம் முடியாது என காக்ரோச் பார்ட்டியினர் கூறுகின்றனர்.

டெல்லியிலிருந்து போராட்டம் வேகமாக பரவுவதால் தமிழகத்தில் நிலைமையை கண்காணிக்க உளவுத்துறையின் Q பிரிவிற்கு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. உளவுத்துறையின் சீனியர் அதிகாரிகளே களத்திலிருந்து போராட்டத்தின் போக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User