"பாரதிராஜாவின் பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும்" - முதல்வர் விஜய்க்கு சித்ரா லக்ஷ்மணன் கோரிக்கை
இயக்குநர் இமயம் பாரதிராஜா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார்.
இந்நிலையில், இயக்குநரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன், ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிகின்ற திரைக் கலைஞரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பெயரிலேயே ஒரு விருதினை வழங்கிட வேண்டும் எனத் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
அது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "70-களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் பாரதிராஜா எனக்கு அறிமுகமானார்.
நான் பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றிய பல படங்களில் அவர் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார்.

பத்திரிகையாளனாக படப்பிடிப்புத் தளங்களில் செய்தி சேகரிக்கச் சென்றபோதெல்லாம் அவருடன் நெருக்கமாகப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அப்போதே அவரிடம் ஒரு 'ஸ்பார்க்' இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும், ஒரு காலகட்டத்திலே தமிழ் சினிமா உலகின் போக்கையே மாற்றி அமைக்கக்கூடிய ஒரு இயக்குநராக அவர் இருக்கப் போகிறார் என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
அவரிடம் இருந்த திறமையை மிகச் சரியாகக் கணித்த தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணு, '16 வயதினிலே' படத்தை இயக்குகின்ற வாய்ப்பை அவருக்கு அளித்தது மட்டுமில்லாமல், சிவசமுத்திரத்திலே நடைபெற்ற அந்தப் படத்தினுடைய படப்பிடிப்பிலே 'கே. பாலச்சந்தருக்கு நிகரான இயக்குநர் இவர்' என்று பாரதிராஜாவை பத்திரிகையாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.
முதல் படத்திலேயே முத்திரை பதித்த பாரதிராஜா முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க 'கிழக்கே போகும் ரயில்' என்ற பெயரில் தன் இரண்டாவது படத்தை உருவாக்கினார்.
தியாகராஜ பாகவதரின் 'ஹரிதாஸ்' படத்துக்குப் பின்னாலே மிக அதிக நாள்கள் ஓடிய பெருமையை அந்தப் படம் பெற்றது. அந்தப் படத்தைத்தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய ஒவ்வொரு படமும் தனி ரகம்.
நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து 'முதல் மரியாதை' என்கிற காலத்தால் அழிக்க முடியாத காவியப் படைப்பை உருவாக்கிய பாரதிராஜா, எண்ணிலடங்காத நட்சத்திரங்களை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர்.
நட்சத்திரங்கள் மட்டுமல்லாது பல தொழில்நுட்பக் கலைஞர்களை தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு. தென்னிந்திய சினிமாவிற்கு மட்டுமின்றி இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்த இயக்குநர் இமயம் இன்று நம்மிடையே இல்லை.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற அந்தக் கரகரப்பான குரலை இனி நாம் கேட்க முடியாது என்று நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.

மரணம் தவிர்க்க முடியாதது என்றபோதிலும் அவரது மறைவை அவ்வளவு எளிதில் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர் வாழ்ந்த விதம். தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநராக இருந்தபோதிலும் எல்லோரிடமும் எளிமையாகப் பழகுகின்ற போக்கைப் பெற்றிருந்தவர் அவர்.
அவரது நினைவைப் போற்றுகின்ற விதத்திலே அரசு மரியாதையுடன் அவருடைய நல்லடக்கம் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழக அரசுக்கு வைக்கின்ற இந்த நேரத்தில், ஒவ்வொரு ஆண்டும் சாதனை புரிகின்ற திரைக்கலைஞரைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பெயரிலேயே ஒரு விருதினை மாண்புமிகு தமிழக முதல்வர் வழங்க வேண்டும் என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்," எனக் கூறியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)