விண்ணில் பாய்ந்த தனியார் ராக்கெட்; மோடியின் பாராட்டை பெற்ற பவன் குமார் சந்தனா! - யார் இவர்?

Jul 18, 2026 - 21:00
0
விண்ணில் பாய்ந்த தனியார் ராக்கெட்; மோடியின் பாராட்டை பெற்ற பவன் குமார் சந்தனா! - யார் இவர்?

இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (Skyroot Aerospace) என்ற தனியார் நிறுவனம் தனது முதல் Orbital ராக்கெட்டான 'விக்ரம்-1' இன்று விண்ணில் செலுத்தியிருக்கிறது.

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் இதுவாகும்.

பவன் குமார் சந்தனாவுக்கு மோடி போனில் தொடர்பு கொண்டபோது
பவன் குமார் சந்தனாவுக்கு போனில் தொடர்பு கொண்டபோது

இதன் வெற்றிக்குப் பின் இருந்தவர் பவன் குமார் சந்தனா. பிரதமர் மோடி இவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்தைத் தெரிவித்து பாராட்டியிருக்கிறார். இந்திய விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பிற்கு ஒரு புதிய பாதையை வகுத்துத் தந்த இந்த பவன் குமார் சந்தனா யார்?

யார் இந்த பவன் குமார் சந்தனா?

இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் பவன் குமார் சந்தனா, தனது பள்ளிப் பருவத்தில் கணித பாடத்தில் வெறும் 52 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தவர்.

ஆனால், அவரது தந்தை அவர் மீது நம்பிக்கை இழக்காமல் ஐஐடி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியில் சேர்த்தார். பிறகு தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று 2007 ஆம் ஆண்டு ஐஐடி கான்பூரில் சேர்ந்தார் பவன் குமார் சந்தனா.

அங்கு பயின்ற மற்ற மாணவர்கள் அதிக சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலைகளைத் தேர்ந்தெடுத்தபோது, பவன் குமார் விண்வெளிப் பொறியியல் துறையைத் தனது எதிர்காலமாகத் தேர்ந்தெடுத்தார்.

பவன் குமார் சந்தனா
பவன் குமார் சந்தனா

படிப்பை முடித்த பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) விஞ்ஞானியாகப் பணிபுரியும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அங்கு சில ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றிய அவர், இந்தியாவின் சொந்த தயாரிப்பில் குறைந்த செலவில் ராக்கெட்டுகளை உருவாக்க வேண்டும் என்ற பெரிய கனவோடு, தனது பாதுகாப்பான அரசு வேலையைத் துறந்தார்.

தனது கனவை நனவாக்க, சக நிறுவனரான நாக பரத் தாகா என்பவருடன் இணைந்து 2018 ஆம் ஆண்டு 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற விண்வெளித் தொழில்நுட்பத் தொடக்க நிறுவனத்தை நிறுவினார்.

பவன் குமார் சந்தனாவின் தலைமையின் கீழ் 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. 2020 இல் 'ராமன்-1' என்ற ராக்கெட் இன்ஜினை வெற்றிகரமாகச் சோதித்த இந்தியாவின் முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையை இது பெற்றது.

தொடர்ந்து 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தனியார் சப்-ஆர்பிட்டல் ராக்கெட்டான 'விக்ரம்-எஸ்' ஐ விண்ணில் செலுத்தி வரலாறு படைத்தது.

விக்ரம் 1 - ஏவுகணை
விக்ரம் 1 - ஏவுகணை

தற்போது, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்தியாவின் முதலாவது தனியார் சுற்றுப்பாதை ராக்கெட்டான 'விக்ரம்-1' ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, இந்தியாவின் விண்வெளித் துறையில் மிக இளம் வயதிலேயே ஒரு வரலாற்றுப் புரட்சியை பவன் குமார் சந்தனா நிகழ்த்தி இருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User