நெல்லை: சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்த தூத்துக்குடி சிறை வார்டன்; சிக்கியது எப்படி?
தூத்துக்குடி மாவட்டம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். நெல்லை சிறையில் வார்டனாகப் பணிபுரிந்தார். கஞ்சா வழக்குகளில் சிக்கிய கைதிகளுடன் அவர் நெருக்கமாகப் பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ததாகப் புகார் எழுந்தது.
இதனையடுத்து அவர், தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் கஞ்சா வழக்குகளில் சிக்கிய கைதிகளுடனான தொடர்பை தமிழரசன் தொடர்ந்தார். இதன் மூலம் அவர், கஞ்சாவை மொத்தமாக வாங்கி பொட்டலங்களாகப் பிரித்து விற்றது போலீஸாருக்குத் தெரிய வந்தது.

தமிழரசனின் நடவடிக்கைகளை உளவுப்பிரிவு போலீஸார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், ஒரு வாரம் விடுப்பு எடுத்த தமிழரசன் நெல்லைக்கு வந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி இரவு நெல்லை டவுண் காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாகச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ.10 லட்சம் பணம் மற்றும் 2 கிலோ கஞ்சா இருந்தது. காரில் இருந்த தமிழரசன், முறப்பநாட்டைச் சேர்ந்த நவீன், ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழரசன் பணிபுரிந்த பேரூரணி சிறையில் அவருடன் பழகிய கைதிகள், நண்பர்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தமிழரசனுக்கு கஞ்சா கடத்தல் கும்பலில் வேறு யார் யாருடன் தொடர்பு உள்ளது.
இதுவரை எவ்வளவு காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார், இதில் வேறு சிறை ஊழியர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க அவரைக் காவலில் எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பின்னர் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நெல்லை சரக சிறைத்துறை எஸ்.பி., செந்தாமரைக் கண்ணன் தலைமையிலான 75-க்கும் மேற்பட்ட போலீஸார் பேரூரணி சிறையில் சோதனை நடத்தினர்.
200-க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள், சமையலறை, பொருட்கள் வைப்பறை, பதிவேடுகள் அறை, கழிவறை, கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை நடத்தினர். ஆனால், எந்தவிதமான போதைப் பொருளும் சிக்கவில்லை. சிறைவார்டன் தமிழரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)