“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” - உதயநிதி

Sep 18, 2026 - 20:31
0
“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” - உதயநிதி

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்; தேவைப்பட்டால், சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடர் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றுவோம்!

நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில்.. “தமிழ்நாடு, இந்திக்கு எதிரான தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்; மாநிலங்கள் தனி நாடுகளாக இயங்க முடியாது” என்று மாண்பமை உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

இந்த நேரத்தில், நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இந்தி உள்ளிட்ட எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. தமிழ்நாடு தனிநாடாக இயங்கவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது.

தமிழ்நாடு
தமிழ்நாடு

இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாடுதான், அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. உயர்கல்விச் சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது.

நவோதயா பள்ளிகளை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், முந்தைய திராவிட மாடல் அரசின் சார்பில் உறுதியான வாதங்களை எடுத்து வைத்தோம்.

அரசியலமைப்புச் சட்டத்தில், கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், ஒன்றிய அரசின் கொள்கையை அப்படியே நிறைவேற்ற வேண்டிய தேவையில்லை.

தமிழ்நாட்டில் ஏற்கனவே மாதிரிப் பள்ளிகள் எனும், உண்டு-உறைவிடப் பள்ளிகள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், நவோதயா பள்ளிகளுக்காகத் தனியாக இடம் ஒதுக்க வேண்டிய அவசியம் இல்லை. நவோதயா பள்ளிகளுக்கு அளிக்கும் நிதியைத் தமிழ்நாடு அரசிடம் அளித்தால், தற்போது நம்மிடம் உள்ள கட்டமைப்பைக் கொண்டே சிறப்பாகச் செயல்பட முடியும்.

மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே, 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய 3,548 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அந்த நிதியை விடுவிக்க வேண்டும் எனப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம்.

உதயநிதி அறிக்கை
உதயநிதி அறிக்கை

தற்போது அந்த வழக்கில், தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள அரசும் நமது இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கத் தேவையில்லை என்பதைத் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த நிலைப்பாட்டில், தற்போதைய அரசு தொடர்ந்து உறுதியான வாதங்களை எடுத்து வைத்திட வேண்டும்.

மேலும், தேவை எழுந்தால் உடனடியாகச் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டி, நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது எனும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை வலியுறுத்தி, தனித் தீர்மானம் இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User