கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

Sep 08, 2026 - 19:00
0
கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம் கிராமத்தை மயானக்காடாக்கிவிட்டது.

ஆண்கள், பெண்கள் என 24 மணி நேரத்துக்குள் 67 பேர் துடிதுடித்து உயிரிழந்தார்கள். நீதிமன்ற வளாகம் மற்றும் காவல் நிலையத்திற்கு சில அடி தூரத்தில் நடைபெற்று வந்த கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் தமிழக அரசை ஆட்டம் காண வைத்தது. அதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம், உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ.50,000 என உடனடி நிவாரணத் தொகையை அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்

அத்துடன் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்தும் உத்தரவிட்டார். அதையடுத்து அந்த ஆணையம் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர், காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் விசாரணை செய்தது.

இதற்கிடையில் மாநில சி.பி.சி.ஐ.டி காவல் பிரிவால் விசாரிக்கப்பட்ட அந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் இப்போது சி.பி.ஐ விசாரணையில் இருக்கிறது. இந்த நிலையில்தான் இன்றைய சட்டப்பேரவையில் தன்னுடைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையம்.

அந்த அறிக்கையில், `மதுவிலக்கு, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அலட்சியமும், கடமை தவறிய போக்கும் இருந்திருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பனை விவகாரத்தில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத்தான் உயிரிழப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது.

மெத்தனால் போன்று மேலும் சில திரவங்களை சாராயத்தில் கலந்து அருந்தியதுதான் உயிரிழப்புகளுக்கு காரணம். பாதிப்பு சம்பவம் தெரிந்தவுடன் கள்ளச்சாராயம் புழங்கும் பகுதிகளில் அதிகாரிகளால் எச்சரிக்கை வழங்கப்படவில்லை.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்

உடனடியாக கள்ளச்சாராய பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை செய்திருந்தால், உயிரிழப்புகளின் எண்ணிக்கைகள் குறைந்திருக்கும். ஆனால் அப்படிச் செய்யாததுதான் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம்' என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், 2023 முதல் 2024 வரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றிய துறை சார்ந்த அதிகாரிகள் மீது விசாரணை தொடங்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்திருக்கிறது. ஆணையத்தின் இந்தப் பரிந்துரையால் கலக்கத்தில் இருக்கின்றனர் துறைசார்ந்த அதிகாரிகள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User