ஆசிய விளையாட்டுகள்: சொகுசு கப்பலில் வீரர்கள்; தங்குமிட திட்டத்தில் சிக்கல்.. ஜப்பானின் முன்னெடுப்பு!

Sep 20, 2026 - 12:00
0
ஆசிய விளையாட்டுகள்: சொகுசு கப்பலில் வீரர்கள்; தங்குமிட திட்டத்தில் சிக்கல்.. ஜப்பானின் முன்னெடுப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என்றாலே பிரமாண்டமான கிராமங்கள், வண்ணமயமான அணிவகுப்புகள் நினைவுக்கு வரும். ஆனால், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஜப்பான், வழக்கமான நடைமுறைகளை மாற்றி யோசித்து புதியதொரு முயற்சியை முன்னெடுத்துள்ளது. இது பலத்த வரவேற்பைப் பெற்றாலும், மறுபுறம் சில சவால்களையும் சந்தித்துள்ளது.

`Athletes’ Village ஏன் தவிர்க்கப்பட்டது?

வழக்கமாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காகத் தனியாக ஒரு பெரிய 'AthletesVillage' (விளையாட்டு கிராமம்) அமைப்பது வழக்கம். இது மிகப்பெரிய கட்டுமானச் செலவை ஏற்படுத்துவதோடு, போட்டிகள் முடிந்த பிறகு அந்தக் கட்டடங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் பாழாகிப்போகும் வாய்ப்பும் உள்ளது. எதிர்காலத்தில் பயன்பாடில்லாமல் போகும் நிலையைத் தவிர்த்து, செலவைக் குறைக்கும் நோக்கில் ஜப்பான் இந்த வழக்கமான முறையைத் தவிர்க்க முடிவு செய்தது.

வீரர்கள் எங்கே தங்குகிறார்கள்?

சுமார் 17,000 வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான தங்குமிடம் ஒரே இடத்தில் இல்லாமல் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதன்மையானது, நகோயா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள 'Costa Serena' கப்பல்!

சுமார் 4,000 பேர் வரை தங்கக்கூடிய இந்தக் கப்பலுடன், சுமார் 2,000 பேருக்கான தற்காலிக குடியிருப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கப்பலையே 'Athletes Village' ஆக்கியது எப்படி?

பல தளங்களைக் கொண்ட Costa Serena கப்பலில் ஏற்கெனவே தங்குமிடம், உணவகம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. போட்டிக்காக வீரர்களின் தேவைக்கேற்ப உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் மருத்துவ வசதிகளில் சிறப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஒரு பெரிய விளையாட்டு கிராமத்தை புதிதாகக் கட்டுவதற்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள ஆடம்பரக் கட்டமைப்பைத் தங்குமிடமாகப் பயன்படுத்த முடிந்தது.

திட்டத்தில் சிக்கல் எங்கே வந்தது?

இந்தச் செலவுக் குறைப்பு முயற்சியில்

முக்கிய சவாலாக உருவெடுத்தது அறைகளை ஒதுக்குவதும், வீரர்களைச் சரியான நேரத்தில் தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்வதும்தான். ஆரம்பத்தில் கணிக்கப்பட்டதைவிட போட்டியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டதும், வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை சுமார் 17,000-ஆக உயர்ந்தது.

இதனால் சில வீரர்கள் அறை ஒதுக்கீட்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், தங்குமிடம், போட்டி நடைபெறும் இடம் மற்றும் பயிற்சி மையம் ஆகியவை வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்ததால், போக்குவரத்து நிர்வாகமும் பெரும் சவாலாக மாறியது.

இந்திய வீரர்களுக்கும் சிக்கல்!

இந்தச் சவால்களின் தாக்கம் இந்திய அணியினரையும் பாதிக்கிறது. இந்திய அணியைச் சேர்ந்த சில வீரர்களும் உதவிப் பணியாளர்களும் தங்குமிட ஒதுக்கீட்டுக்காகப் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. குறிப்பாக, இந்திய ரோயிங் அணியைச் சேர்ந்தவர்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

மேலும், துப்பாக்கிச் சுடுதல் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களுக்கும் போட்டி நடைபெறும் இடங்களுக்கும் இடையே நீண்ட தூரம் இருந்ததால், பயண நேரமும் சோர்வும் அதிகரித்தன. சில விளையாட்டுகளுக்கு வீரர்கள் பயிற்சி மையங்களை அடைய நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

வசதியா, ஒருங்கிணைப்பா?

இந்த முயற்சியின் அடிப்படை நோக்கம் செலவைக் குறைப்பதும், வீணான கட்டுமானங்களைத் தவிர்ப்பதும்தான். ஆனால், வீரர்களை ஒரே இடத்தில் தங்க வைக்காதபோது அறை ஒதுக்கீடு, அங்கீகாரம், உணவு, மருத்துவ வசதி மற்றும் போக்குவரத்து என அனைத்தையும் ஒரே நேரத்தில் துல்லியமாக ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்த புதிய தங்குமிட முறை, எதிர்காலப் போட்டிகளுக்கான ஒரு புதிய அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், செலவைக் குறைக்கும் எந்தவொரு திட்டமும் நடைமுறையில் வெற்றிபெற, தங்குமிடம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நிர்வாகத் திறனும் ஒருங்கிணைப்பும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த அனுபவம் உணர்த்துகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User