``அந்தப் பதவிக்காக நான் செய்த மிகப்பெரிய தியாகம்" - குடியரசுத் தலைவரின் வைரல் பாதுகாவலர் பேட்டி!
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்பு உதவியாளராகப் (Aide-de-Camp - ADC) பணியாற்றியவர் முன்னாள் சிறப்புப் படை அதிகாரி மேஜர் ரிஷப் சிங் சம்ப்யால். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவர் கனிவுடன் கவனித்துக்கொண்ட விதம் சமூக ஊடகங்களில் அவ்வபோது வைரலானது. இந்த நிலையில், அவர் சமீபத்தில் தன் பொறுப்பை ராஜினாமா செய்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியரசுத் தலைவரின் ஏடிசி-யாகச் செயல்பட்ட இவரின் பணி, அன்றாட வாழ்க்கை, கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் அட்டவணைகளுக்கு உட்பட்டே நகர்ந்திருக்கிறது.
குடியரசுத் தலைவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், அவர்கள் நினைப்பதற்கு முன்பே செய்து முடிப்பதே இவரது பிரதான பொறுப்பாக இருந்துள்ளது. ஆனால், இந்த உயரிய மற்றும் கௌரவமிக்கப் பொறுப்பு, இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும், தியாகத்தையும் கோரியுள்ளது. அது தொடர்பாக பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், ``குடியரசுத் தலைவரின் ஏடிசி-யாகப் பணியாற்றுபவர்கள் தங்களின் பதவிக் காலத்தில் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற விசேஷ விதிமுறை (Clause) அமலில் உள்ளது.
இதனால் எனது குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டியிருந்தது. ஒரு சாதாரண மனிதனைப் போல வெளியே சென்று வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போனது. 3 ஆண்டுகள் எனது சொந்த வாழ்க்கையை முழுமையாக ஒதுக்கி வைத்ததே, அந்தப் பதவிக்காக நான் செய்த மிகப்பெரிய தியாகமாக கருதுகிறேன். பல மாத யோசனைகளுக்குப் பிறகே, கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்யாமல், இராணுவப் பணியிலிருந்து விலகும் முடிவை எடுத்தேன்.
இந்த அனுபவம் குறித்து வருந்தவில்லை. கௌரவமிக்க ஒரு பொறுப்பிற்குச் செலுத்த வேண்டிய விலையாகவே இதைப் பார்க்கிறேன். இருப்பினும், நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்புத் தலைவருடன் செலவிட்ட இந்த 3 ஆண்டுகள், எனக்கு ஒரு மறக்க முடியாத உணர்வுப்பூர்வமான அனுபவத்தை கொடுத்துள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையில் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடனான பிணைப்பு ஒரு தாயின் அரவணைப்பைத் தந்தது. 2014-ம் ஆண்டு முதல் இராணுவப் பணியின் காரணமாகத் தனது சொந்தத் தாயுடன் சேர்ந்து வாழ முடியாத சூழல் இருந்த நிலையில், குடியரசுத் தலைவருடன் தினமும் செலவிட்ட நேரம் அந்த ஏக்கத்தைப் போக்கியது. குடியரசுத் தலைவரின் எளிமையான மற்றும் அன்பான குணநலன், என்னைப் போன்ற அதிகாரிகளுக்குத் தாய் வீட்டின் உணர்வைத் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை." என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)