பெண்களுக்கு காதல் வலை; நகை, பணம் பறித்து சொந்தமாக ஆம்னி பஸ் வாங்கிய இளைஞர் - போக்ஸோ வழக்கில் கைது

Aug 18, 2026 - 10:31
0
பெண்களுக்கு காதல் வலை; நகை, பணம் பறித்து சொந்தமாக ஆம்னி பஸ் வாங்கிய இளைஞர் - போக்ஸோ வழக்கில் கைது

கன்னியாகுமரி மாவட்டம் ​மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, பாளையங்கெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ் (25). இவர் சொந்தமாக ஒலி, ஒளி சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உண்டு.

ஜெனிஸ் சொகுசு கார் மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் வலம் வந்து, அரசு ஊழியர்களின் மகள்கள், பணக்கார வீட்டு மாணவிகள் மற்றும் கணவன் வெளிநாட்டில் உள்ள பெண்களைக் குறிவைத்து நட்பு ஏற்படுத்தி உள்ளார். தன்னை வசதியானவர்போன்று காட்டிக்கொண்டு பெண்களிடம் நெருக்கமாகப் பழகுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ​

இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக நடித்துள்ளார். அந்த மாணவியை ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததோடு, அவரிடமிருந்து சுமார் 40 பவுன் தங்க நகைகளையும், பணத்தையும் ஜெனிஸ் பறித்துள்ளார்.

இதுபோன்று, புதுக்கடை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரிடமும் நெருங்கிப் பழகி 26 பவுன் நகைகளைப் பறித்துள்ளார். பின்னர் தனது நகைகளைத் திருப்பித் தருமாறு அந்த மாணவி கேட்டபோது, மிரட்டல் விடுத்துள்ளார் ஜெனிஸ். இதையடுத்து ​பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலினிடம் தனித்தனியாகப் புகார் அளித்தனர்.

புகாரின் தீவிரத்தை உணர்ந்த எஸ்.பி., உடனடியாகத் தனிப்படை அமைத்து ஜெனிஸை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, பிளஸ் 2 மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஜெனிஸ் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது
கைது

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெண்களிடம் காதல் நாடகமாடி பறித்த நகைகளை விற்றும், அடகு வைத்தும் பெற்ற லட்சக்கணக்கான பணத்தில் புதிதாக ஒரு ஆம்னி பஸ் மற்றும் இரண்டு சொகுசு கார்களை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார் ஜெனிஸ். மேலும், தனது சவுண்ட் சர்வீஸ் தொழிலுக்காக அதிநவீன ஸ்பீக்கர்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களையும் வாங்கி தொழிலதிபரைப் போல ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

​தற்போது வரை புதுக்கடை, மார்த்தாண்டம், திருத்துவபுரம், உண்ணாமலைக்கடை பகுதிகளைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் இவரது  வலையில் விழுந்து தங்களது நகைகளையும், லட்சக்கணக்கான பணத்தையும் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட ஜெனிஸ்

பெண்களை ஏமாற்றிய பணத்தில் வாங்கிய ஆம்னி பஸ், சொகுசு கார்களைப் பறிமுதல் செய்ய போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.​கைதான ஜெனிஸின் செல்போனைப் பறிமுதல் செய்துள்ள தனிப்படை போலீசார், அதில் அவர் வேறு யார் யாரிடம் பேசி ஏமாற்றியுள்ளார் என்பது குறித்தும், பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சைபர் பிரிவு உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User