'இடதுபக்கம் வீடு; வலதுபக்கம் கடற்கரை!' - முதல்வர் விஜய் டிக் அடித்த புதிய தலைமைச் செயலக ஸ்பாட்!

Sep 10, 2026 - 15:00
0
'இடதுபக்கம் வீடு; வலதுபக்கம் கடற்கரை!' - முதல்வர் விஜய் டிக் அடித்த புதிய தலைமைச் செயலக ஸ்பாட்!

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் இடத்தை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கையை அளிக்க அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

புதிய தலைமைச் செயலக ஸ்பாட்!

1200 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்டமாக ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். புதிய தலைமைச் செயலகத்துக்காக கிண்டி, நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் இடம் பார்க்கப்பட்டது. ஆனால், 25.55 ஏக்கர் இடம் ஒரே இடத்தில் இருப்பதால் பட்டினப்பாக்கத்தை டிக் அடித்திருப்பதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அரசு தேர்வு செய்திருக்கும் அந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டோம்.

முதல் பார்வையிலேயே இரண்டு முக்கியமான விஷயங்களை கவனிக்க முடிந்தது. அரசு தேர்வு செய்திருக்கும் அந்த இடத்தின் இடதுபக்கம் முதல்வர் விஜய்க்கு சொந்தமான வீடு இருக்கும் அப்பார்ட்மெண்ட் ஒன்று இருக்கிறது. நீலாங்கரை வீட்டில் வசிக்கும் விஜய், அரசியல்ரீதியான சந்திப்புகளை இந்த வீட்டில்தான் நடத்துவார். இடதுபக்கம் வீடு இருப்பதைப் போல வலதுப்பக்கம் பட்டினப்பாக்கம் கடற்கரை இருக்கிறது.

பட்டினப்பாக்கம்
பட்டினப்பாக்கம்

கடற்கரைக்கும் முதல்வரின் வீட்டிற்கும் நடுவில்தான் புதிய தலைமைச் செயலகம் அமையவிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் பழுதடைந்த பழமையான வீடுகள் இருக்கிறது. இந்த வீடுகளில் ஒரு சிலர் மட்டுமே வசிக்கின்றனர். அதனால் நில கையகப்படுத்துதலில் பெரிய பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்தப் பகுதியை சுற்றியிருக்கும் மக்களிடம் பேசுகையில் அவர்கள் இந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் வருவதை அவ்வளவாக விரும்பவில்லை என தெரிந்துகொள்ள முடிகிறது.

'அரசு தேர்வு செய்திருக்கும் இந்த இடத்தின் ஒரு பக்கத்தில் கடற்கரையும் மீனவ கிராமங்களும் அமைந்திருக்கின்றன. அரசு தேர்வு செய்திருக்கும் இடத்திற்கு அருகேயே மீனவர்களின் கடைகளும் உணவகங்களும் இருக்கின்றன. தலைமைச் செயலகம் அமைவதால் பாதுகாப்பு சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் தங்களின் இடத்தை காலி செய்ய சொல்வார்களோ என மீனவர்கள் அஞ்சுகிறார்கள். அதேமாதிரி, இடத்தை காலி செய்ய சொல்லாவிட்டாலும் பாதுகாப்பு எனக் கூறி காவல்துறையினர் கெடுபிடி செய்வார்களோ என்கிற தயக்கமும் இருக்கிறது. அதேமாதிரி, அந்த 25.55 ஏக்கருக்கு அருகேயே குடியிருப்பு வீடுகள் நெருக்க நெருக்கமாக இருக்கிறது. அந்த வீடுகளின் உரிமையாளர்களும் தங்கள் இடத்தைப் பற்றிய கவலையில் இருக்கின்றனர்.

முதல்வரின் வீடு
முதல்வரின் வீடு

இதையெல்லாம் கடந்து இது விசாலமான பகுதி இல்லை. எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதி. சுற்றி பள்ளி கல்லூரிகள் நிறுவனங்கள் என இருப்பதால் காலை, மாலை நேரங்களில் இந்த இடத்தை கடக்க பெரும் சிரமமாக இருக்கும். இங்கே தலைமைச் செயலகமும் அமைந்தால் அது இன்னும் சிக்கலை ஏற்படுத்தும்' என்கின்றனர் சுற்றியிருக்கக் கூடிய மக்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User