மாணவர்கள் போராட்டம்: ``அனைத்தும் நியாயமான கேள்விகள்" - கைதுக்குப் பிறகு ராகுல் காந்தி வீடியோ!

Jul 22, 2026 - 06:02
0
மாணவர்கள் போராட்டம்: ``அனைத்தும் நியாயமான கேள்விகள்" - கைதுக்குப் பிறகு ராகுல் காந்தி வீடியோ!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று காலை மக்களவைச் சபாநாயகரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, மாணவர்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து அவையில் விவாதிக்க அனுமதிப்பது மிகவும் அவசியம் எனக் வலியுறுத்தினார். அதற்கு, அரசின் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் தெரிவித்த நிலையில், அரசிற்கு இச்சம்பவம் குறித்து விவாதிக்க எந்தவொரு விருப்பமும் இல்லை என்பது அடுத்தடுத்த நிகழ்வுகள் மூலம் தெளிவானது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அரசு விவாதத்திற்கு மறுத்ததைத் தொடர்ந்து, நீட் விவகாரத்தையும் மாணவர்களின் பிரச்சினைகளையும் தேசிய அளவுக் கவனத்திற்குக் கொண்டுவரும் நோக்கில், டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லம் எதிரே எதிர்க்கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தின் போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இந்தியக் கல்வி முறை ஏன் சீர்குலைந்து வருகிறது? வினாத்தாள்கள் ஏன் மீண்டும் மீண்டும் கசிகின்றன? இந்தியாவில் கல்வி ஏன் இவ்வளவு விலை உயர்ந்ததாக மாறியுள்ளது? பிள்ளைகளின் படிப்புக்காகக் குடும்பங்கள் ஏன் தங்களை நிதி ரீதியாக அழித்துக்கொள்ள வேண்டியுள்ளது? இவை அனைத்தும் நியாயமான கேள்விகள். இதைக் கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உடனடியாகத் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். மேலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுகுறித்து நாளை விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். முழு எதிர்க்கட்சியும் நாட்டின் மாணவர்களுடன் உறுதியாக நிற்கிறது. தேர்வு முறை மற்றும் கல்வி முறையில் முழுமையான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். மாணவர்களின் குரலுக்காகவும், அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நீடிக்கும்" என உறுதிபடத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User