'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

May 18, 2026 - 15:01
0
'இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லையா?' - நெதர்லாந்து பிரதமருக்கு இந்தியா தக்க பதில்

இந்திய பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி என ஐந்து நாடுகள் பயணத்தை மே 15 முதல் மே 20 வரை மேற்கொண்டிருக்கிறார்.

மோடி நெதர்லாந்து செல்வதற்கு முன்பு, அவரது பயணம் குறித்து அந்த நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டன், இந்தியா குறித்த சில கருத்துகளை உள்நாட்டு பத்திரிகைகளுக்கு பகிர்ந்துள்ளார்.

என்ன சொல்லியிருக்கிறார் அவர்?

"இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பெரியளவில் இல்லை. அதுபோல, இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளும் அழுத்தத்தில் உள்ளன. இப்படி அதிகம் பாதிக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள். பிற சிறுபான்மையினரும் பாதிக்கப்படுகின்றனர்" என்று பேசியிருக்கிறார்.

மோடி நெதர்லாந்திற்கு சென்றிருந்தபோது இந்தக் கருத்து எதுவும் மோடி - ராப் ஜெட்டன் சந்திப்பில் எட்டிப்பார்க்கவில்லை. எட்டிப்பார்க்காததுபோல இரு நாட்டு அதிகாரிகளும் பார்த்துக்கொண்டனர்.

சிபி ஜார்ஜ்
சிபி ஜார்ஜ்
மோடி நெதர்லாந்து பயணத்தை முடித்து ஸ்வீடனுக்கு ஃபிளைட் ஏறியதும், இந்தியாவின் மேற்கத்திய நாடுகளின் தூதர் சிபி ஜார்ஜ் ராப் ஜெட்டனின் பேச்சிற்கு பதிலளித்துள்ளார்...

"இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் நிலை குறித்துப் பேச வேண்டும் என்றால்... என்னுடைய அனுபவத்திலிருந்து நான் ஒன்று சொல்கிறேன். பொதுவாக, இப்படிப்பட்ட கேள்விகள் ஏன் வருகின்றன என்றால், இதைக் கேட்கிறவர்களுக்கு இந்தியாவைப் பற்றிச் சரியான புரிதல் இல்லை என்பதுதான் அர்த்தம்.

இந்தியா என்பது 140 கோடி மக்கள் வாழும், உலகிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு. இது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான நாகரிகம் கொண்டது.

கலாசாரம், மொழிகள், உணவு, மதம் என எல்லாவற்றிலும் பல்வேறு பன்முகத்தன்மை கொண்ட ஒரு தேசம். இந்தியாவைப் பாருங்கள், அது எவ்வளவு அழகானது என்று உங்களுக்கே தெரியும்.

உலகிலேயே மிகப்பெரிய நான்கு முக்கிய மதங்கள்—இந்து மதம், பௌத்தம், சமணம் மற்றும் சீக்கிய மதம்—ஒரே நாட்டில் தோன்றியது என்றால் அது இந்தியாவில்தான்.

இந்தியா
இந்தியா

இந்த மதங்கள் இந்தியாவில் தோன்றி, அங்கேயே தொடர்ந்து தழைத்தோங்கி வளர்ந்து வருகின்றன.

மறுபடியும் இந்தியாவைப் பாருங்கள்; உலகின் அனைத்து முக்கிய மதங்களும் இந்தியாவை நோக்கி வந்துள்ளன. யூத மதம் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்து வருகிறது.

இங்கிருக்கும் மற்ற மதங்களோடு இணக்கமாக வாழ்ந்து வருகிறது. உலகிலேயே யூத மக்கள் எந்தவிதமான ஒடுக்குமுறைக்கோ அல்லது துன்புறுத்தலுக்கோ ஆளாகாத மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று—இதுதான் இந்தியாவின் அழகு.

அடுத்து, இஸ்லாம் அல்லது கிறித்தவ மதத்தைப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, உடனடியாகக் கிறித்தவ மதம் இந்தியாவிற்குள் வந்தது, இன்றும் தொடர்ந்து செழித்து வளர்ந்து வருகிறது. இன்றைக்கு இந்தியாவில் மட்டும் 3 கோடிக்கும் அதிகமான கிறித்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User