மேகதாது விவகாரம்: 'தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?' - அமைச்சர் நிர்மல் குமார் பதில்

Aug 01, 2026 - 13:00
0
மேகதாது விவகாரம்: 'தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?' - அமைச்சர் நிர்மல் குமார் பதில்

திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்தபோது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், ``சுமார் 3,70,000 மின் கட்டணப் புகார்கள் வந்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தவறான தகவலைக் கூறி, மக்களிடையே ஒரு பதற்றமான சூழலை உருவாக்க முயன்றுள்ளார்.

உண்மையில் 3.70 லட்சம் புகார்கள் வரவில்லை. சம்மர் முடிந்த பிறகு வழக்கமாக ஏற்படும் மின்கட்டண மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, நிர்வாக ரீதியாக நாங்களாகவே முன்வந்து 3,70,000 மின் நுகர்வோரின் கணக்குகளை எடுத்து மறுமதிப்பீடு செய்ய திட்டமிட்டோம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கடந்த இரண்டு நாள்களில் சுமார் 10,000 மின் நுகர்வோரின் கணக்குகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 50 கணக்குகளில் மட்டுமே ரீடிங் வேறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானவைப் பூட்டிய வீடுகள் என்பதால், முந்தைய அளவீட்டை வைத்து பதிவிட்டதால் ஏற்பட்ட வேறுபாடே தவிர வேறில்லை.

மற்றபடி அனைத்து இடங்களிலும் சரியான அளவீடுகளே எடுக்கப்பட்டுள்ளன. கோடைக் காலத்தில் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும்போது, 250 யூனிட் பயன்படுத்திய இடத்தில் பயன்பாடு உயர்ந்து கட்டணமும் அதிகரிக்கும். இதைப் புரிந்து கொள்ளாமல் வாட்ஸ்அப் தகவல்களை வைத்துக்கொண்டு தவறான செய்திகளைப் பரப்புவதை தி.மு.க தலைவர் தவிர்க்க வேண்டும்.

மாதாந்திர மின் கணக்கீடு என்பது நமது வாக்குறுதியில் ஒன்றாகும். ஆனால், அதை நடைமுறைப்படுத்த போதிய அளவீட்டாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த நிலையைச் சீரமைக்க 'மல்டி பவர் பர்பஸ் ஃபீல்ட் அசிஸ்டெண்ட்' என்ற பெயரில் புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விரைவில் வாக்குறுதி அளித்தபடி மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை கண்டிப்பாகச் செயல்படுத்தப்படும். காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது மட்டுமே தமிழ்நாட்டுக்கு இருக்கும் முதன்மையான மற்றும் ஒரே வழியாகும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 1974-ல் மெட்ராஸ் மாகாணத்திற்கும் மைசூருக்கும் இடையே இருந்த 50 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மிஸ் செய்ததே இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

2007-ல் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு வந்தபோதும், அதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட அன்றைய அதிமுக அரசு 2013 வரை போராட வேண்டியிருந்தது. அதன் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க 2018 வரை சுப்ரீம் கோர்ட் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் நிலவியது.

இன்றைய சூழலில் மத்திய அரசில் இருக்கும் அமைச்சர்களுக்கே 2018-ல் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்த தெளிவு இல்லாமல், கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டுக்கு எதிராகவும் பேசி வருகின்றனர். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சிக்கல்களில் மத்திய அரசு தலையிட்டு, அணைகளின் செயல்பாட்டு உரிமையைத் தன்வசப்படுத்தி சரியான கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவது மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து முதல்வர் விரைவாக ஆராய்ந்து தகுந்த முடிவை அறிவிப்பார். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க சட்டப்பூர்வமாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ, அவை அனைத்தையும் இந்த அரசு நிச்சயமாக மேற்கொள்ளும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User