`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' - கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

May 03, 2026 - 11:26
0
`மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான்' - கோவையில் செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பாக 2026 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கையுடன் தேர்தல் முடிவுகளும் வெளியாகும். இதற்கிடையில், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளும் வெளியானது. அதில் தி.மு.க கூட்டணி ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், இன்று மாலை கோவையில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``சமீபத்தில் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தி.மு.க கூட்டணிக்கு 140 முதல் 145 இடங்கள் கிடைக்கும் எனக் கூறியுள்ளன. ஆனால் நாங்கள் முதல் நாளிலிருந்தே சொல்லி வருகிறோம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

மக்கள் மனநிலை ஒரே இரவில் மாறிவிடாது. 140 இடங்கள் என்று சொல்வதை எங்களால் ஏற்க முடியாது. அது வெறும் கருத்துத் திணிப்பு. வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பா.ஜ.க அரசு தேர்தல் நேரத்தில் மட்டும் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்திவிட்டு, தேர்தல் முடிந்தவுடன் விலையை உயர்த்துவதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தமிழ்நாட்டு மண்ணில் யாருக்கு இடமில்லை என்பதை மக்கள் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டனர். கடந்த ஐந்து ஆண்டுக்கால சிறப்பான ஆட்சி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரின் தீவிரப் பிரசாரம், முதல்வர் ஸ்டாலினின் அயராத களப்பணி ஆகியவை வீண் போகாது.

தேர்தல் முடிவுகள் எழுச்சியாக இருக்கும். காங்கிரஸ் அழிவுப் பாதையில் செல்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. அப்படிச் சொல்வதில் நியாயமில்லை. கடந்த முறை 25 தொகுதிகளில் போட்டியிட்ட நாங்கள், இப்போது 28 தொகுதிகளில் களம் கண்டுள்ளோம். மாநிலங்களவை இடத்தையும் கூடுதலாகப் பெற்றுள்ளோம். புதுச்சேரி - தமிழ்நாடு என நாடாளுமன்றத் தேர்தலில் 100% வெற்றி விகிதத்தைத் தந்துள்ளோம். இது வளர்ச்சியா அல்லது அழிவா? வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடப்பதாகக் கூறப்படும் புகார்களை ஏற்க முடியாது.

ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை
ராகுல் காந்தி, செல்வப்பெருந்தகை

வேட்பாளர் தேர்வு என்பது என்னுடைய முடிவு மட்டுமல்ல. சி.இ.சி (CEC) உள்ளிட்ட பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலைமைதான் முடிவு செய்கிறது. வாய்ப்பு கிடைக்காதவர்களின் மனக்குமுறல்கள் போராட்டமாக வெடிப்பது இயல்புதான். ராகுல் காந்தி உரையை நான் மொழிப்பெயர்த்ததும் விமர்சிக்கப்படுகிறது. நான் அரசுப் பள்ளியில் படித்தவன், சிபிஎஸ்இ-யில் படிக்கவில்லை. என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாகவே மொழிபெயர்ப்பு செய்கிறேன். இதைக் குறைகூறுபவர்கள் மனநிலையை என்ன சொல்வது?" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User