`எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார், ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புவார்' - செல்லூர் ராஜூ

Mar 13, 2026 - 11:32
 0
`எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார், ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புவார்' - செல்லூர் ராஜூ

`மதுரை மாநாகராட்சியில் 200 கோடி ரூபாய் அளவிற்கு வரி முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்தை அனைத்து பகுதிகளுக்கும் செயல்படுத்த வேண்டும்' என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதுரை முனிச்சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மற்றும் பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பாஜக மாநில செயலாளர் இராம.ஸ்ரீனிவாசன் பத்திரிக்கையாளர்களை  சந்தித்து பேசுகையில், "தமிழகத்தில் உள்ள 24 மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சியின் ஊழல் மட்டுமே வெளியே வந்துள்ளது. இந்தியாவிலேயே குப்பை நிறைந்த மாநகராட்சியாக மதுரை திகழ்கிறது. தேர்தலுக்கு பின்னர் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள், அசுர சக்தியாக உள்ள திமுகவை தோல்வியடைய செய்ய NDA கூட்டணியினர் பாடுபட வேண்டும்" என்றார்.

அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசுகையில் "தமிழகத்தில் மொம்மை ஆட்சி, நிர்வாக திறனற்ற ஆட்சி நடைபெறுகிறது. திமுக ஆட்சியில் கீழிருந்து மேல் மட்டம் வரை ஊழல், தேர்தலுக்கு பின்னர் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள்.  திமுகவினர் தங்கத்தை கட்டி,கட்டியாக கொடுத்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

திமுக ஆட்சியில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். அப்துல் கலாம் இளைஞர்கள் குறித்து கண்ட கனவை திமுக சிதைத்து விட்டது, காற்றில் கூட ஊழல் செய்யலாம் என கண்டுபிடித்து திமுக. இதற்காக திமுகவுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.

செல்லூர் ராஜூ

பாட்டிலுக்கு 10 ரூபாய் என நாள் ஒன்றுக்கு 15 கோடி திமுக கொள்ளையடித்து வருகிறது. தமிழகத்தில் நாள்தோறும் கொலை, கொள்ளை நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சியில் மேயரை திமுகவால் தேர்வு செய்ய முடியவில்லை.  மதுரை மாநகராட்சிக்குள் சென்றாலே காசு கேட்கிறார்கள்.

மதுரை மாநகராட்சியில் யார் யார் ஊழல் செய்து உள்ளார்கள் என பட்டியல் உள்ளது. யாரும் தப்பிக்க முடியாது, தேர்தலுக்கு பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுப்போம். மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் ஒரு லட்சம் பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பிளாட் போட வேண்டும் என்றால் 30 இலட்சம் கொடுக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் 40 இ-டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளது.

அதிமுக ஆர்ப்பாட்டம்

குறிப்பிட்ட ஒப்பந்தகாரருக்கு மட்டுமே மாநகராட்சி டெண்டர் வழங்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வருவார், ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புவார். மதுரையில் யார்? ஊழல் செய்தார்கள் என்ற பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் கொடுப்போம். மதுரை மாநகராட்சி ஊழல் நிறைந்த, செயல்படாத மாநகராட்சியாக உள்ளது, மாநகராட்சி ஆணையர் நல்லவர் தான், ஆனால், அவருடன் உள்ள அதிகாரிகள் கொள்ளை அடிக்கிறார்கள்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0