`இப்படி மென்ட்டல் டார்ச்சர் பண்ணாதீங்க' - கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட அயலக மாணவர்; உதயநிதி கண்டனம்

Sep 17, 2026 - 18:31
0
`இப்படி மென்ட்டல் டார்ச்சர் பண்ணாதீங்க' - கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட அயலக மாணவர்; உதயநிதி கண்டனம்

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக கடந்த மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, ``இதுவரை மாணவர் பாரதி தாசனுக்கு ரூ.48,22,097/-ஐ மாணவரின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, மாணவருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதற்குரிய சரியான பயன்பாட்டு விவரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்காமல் உள்ளார். மேலும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமலேயே கூடுதல் தொகை பெற சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் மாணவர் தவறான தகவல்களை கொடுத்து வருகிறார்." எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

வன்னி அரசு

அமைச்சரின் விளக்கத்துக்குப் பிறகு மாணவர் பாரதிதாசன் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், ``எனக்கு அரசு நிதி வழங்கியது 2025-ம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம். எனது இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள், பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதற்கான ஆராய்ச்சி நிதி கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறேன். எனது பேராசிரியர் கடந்த மார்ச் 24, அன்று இதற்கான விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 21 அன்று ஆராய்ச்சி தொடர்பான கட்டண பில்கள் மற்றும் விலைப்பட்டியல்களை அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தேன்.

இது குறித்து அமைச்சர் வன்னி அரசு அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஜூலை 20, மற்றும் ஆகஸ்ட் 11, 2026 ஆகிய தேதிகளில் அவருக்கு அவசர கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. அமைச்சர் வன்னி அரசு குறைந்தபட்சம் என்னிடம் என்னப் பிரச்னை என்பது குறித்து விவரமாவது கேட்டிருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர் மீதே தவறான பிம்பத்தை கட்டமைக்க முயல்வது மிகவும் வருத்தத்திற்குரியது. மீண்டும் அமைச்சர் வன்னி அரசுக்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியிருக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

பாரதிதாசன்
பாரதிதாசன்

அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் அமைதியாகவே இருந்தது. தற்போது அந்த மாணவர் பாரதிதாசன் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் கண்ணீர் மல்க, ``என் நலம் விரும்பிகளுக்கு இந்தப் பதிவு வேதனையைத் தரும் என எனக்குத் தெரியும். ஏப்ரல் மாதத்திலிருந்து `அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தில்' படிக்கும் எனக்கு கடந்த ஆண்டுக்கான நிதி வந்துவிட்டது. இந்த ஆண்டுக்கான நிதி வரவில்லை எனப் பேசிவருகிறேன். இது சட்டசபை வரை பேசப்பட்டது. ஆனால், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதற்குப் பிறகு பொது வெளியில் வெளியிடமுடியுமான ஆவணங்களை ஆதாரமாக வெளியிட்டேன். அன்று இரவே பல்கலைக்கழக குழு மூலம் எல்லா ஆவணங்களையும் அனுப்பக் கேட்டீர்கள். அதுபோலவே நானும் செய்தேன். ஆனால் இன்றுவரை எனக்கான நிதி வரவில்லை. கல்லூரியிலிருந்து என்னை வெளியேற்றப் போகிறார்கள். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் AIIMS-ல் என் ஆய்வை பிரசென்ட் பண்ணக் கூப்பிட்டிருக்காங்க. ஆனால் நிதி இல்லாத காரணத்தால் என்னால் அங்கும் இப்போது போக முடியாது. நிதி இன்மையால் 6 மாதமாக என் ஆய்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் என்னைக் கட்டம் கட்டி உங்களோட அதிகாரத்தால் என்னை ஒடுக்க நினைக்கிறீங்க. `நீ இந்த ஆய்வுக்காகத்தான் பொருள்களையெல்லாம் வாங்கினாயா எனக் கேள்வி கேட்டு?' முதல்லிருந்து திரும்பவும் ஆரம்பிக்கிறீங்க.

பாரதிதாசன்
பாரதிதாசன்

என்னோட எத்திக்ஸ் கோடு, ப்ராஜெக்ட் எல்லாத்தையும் அனுப்பிட்டேன், அதுலயே எல்லாம் இருக்கும். நீங்க இப்போ திருப்பி இப்படி ஒரு கேள்வியை எழுப்பி, என்னோட கிரெடிபிலிட்டி (Credibility), என் ரிசர்ச் எல்லாவற்றையும் ஸ்பாயில் பண்ணிட்டீங்க. இங்க என் பேராசிரியர்கள் என் மேல வச்சிருந்த நம்பிக்கையை நீங்க உடைச்சிட்டீங்க. நான் ஒரே ஒரு விஷயம்தான் பதிவு பண்ணனும்னு நினைக்கிறேன். எங்க கிராமத்துலயும் சரி, எங்க குடும்பத்துலயும் சரி மெடிக்கல் ரிசர்ச்க்கு வந்த முதல் தலைமுறை ஆள் நான்தான்.

"நீ ஏன் படிக்கிற? படிக்காத, நீ அடிமையாவே இரு"ன்னு சொல்லணும்னா மாண்புமிகு அமைச்சர் சொல்லிருங்க. தயவுசெஞ்சு மென்ட்டல் டார்ச்சர் பண்ணாதீங்க. முடியாதுன்னா முடியாதுன்னு சொல்லிருங்க. நான் வேற ஆல்டர்நேட்டிவ் சோர்ஸ் என்ன இருக்குன்னு பார்த்து, இந்தியாவுக்குள்ளயோ அல்லது வேற எங்கயாவது என் ஆராய்ச்சியைத் தொடர்றேன். என்னை இப்படி மென்ட்டல் டார்ச்சர் பண்ணாதீங்க, ஐ அம் நாட் வெல். வரலாற்றில் ரோஹித் வெமுலாவுக்கு என்ன நடந்துச்சோ, அன்னைக்கு அந்த அமைச்சகம் எப்படிச் செயல்பட்டதோ, இன்னைக்கு இந்த அமைச்சகமும் அப்படிச் செயல்படுதுன்னு நான் குற்றச்சாட்டாவே வைக்கிறேன். இதான் உண்மை." என உருக்கமாக பேசியிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விவாதமாகியிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம். மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது. ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User