’சொந்த கார் இல்லாத எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கார் வழங்கணும்’ – கார்த்தி சிதம்பரம்

Aug 21, 2026 - 15:00
0
’சொந்த கார் இல்லாத எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டுமே கார் வழங்கணும்’ – கார்த்தி சிதம்பரம்

கோவை விமான நிலையத்தில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் அரசு திட்டங்கள் செயல்படுவதை நிறுத்த வேண்டும். ஆந்திர அரசு மூன்று மற்றும் நான்காவது குழந்தைகளுக்கு சலுகைகள் அறிவித்ததை கடுமையாக எதிர்க்கிறேன். தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு சிறிய, ஆரோக்கியமான குடும்பங்களே தேவை. பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் இருந்தால், ஓய்வுபெறும் வயதை உயர்த்திக் கொள்ளலாம். 70 முதல் 80 வயது வரை மக்கள் ஆரோக்கியமாக இருக்கும் காலத்தில் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற கட்டாயம் தேவையில்லை.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் மற்றும் படிகள் வழங்கும் விவகாரத்தில், சொந்தமாக வாகனம் வாங்க வசதியுள்ள எம்.எல்.ஏ-க்கள் இந்தச் சலுகையை சுயமாக விட்டுக் கொடுக்க வேண்டும். சொந்த வாகனம் இல்லாத, மக்கள் பணிகளுக்கு உண்மையிலேயே வாகனம் தேவைப்படும் எம்.எல்.ஏ-க்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

கர்நாடகாவின் மேகதாது அணை விவகாரத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்திற்கு உரிய நீர்ப்பங்கீட்டைப் பெறுவதே முதன்மையான நோக்கம்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு அணை உறுதியாக இருப்பது நிபுணர் குழுக்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் அச்சங்கள் பரஸ்பர பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். அதே வேளையில் தமிழகத்தின் உரிமைகளும், அணையின் பராமரிப்பு மற்றும் மேலாண்மைக் கட்டுப்பாடும் எப்போதும் தமிழகத்திடமே நீடிக்க வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமான நடைமுறைதான். இதில் புதிதாகவோ வியப்படையவோ எதுவும் இல்லை” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User