பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு எதிரான வழக்கில் மறு விசாரணையா? - உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன?

Jun 30, 2026 - 18:32
0
பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கு எதிரான வழக்கில் மறு விசாரணையா? - உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்ன?

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குற்றவாளியாக உள்ள வழக்கில், மறு விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி தொடர்ந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரவீன்

கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், அதியூர் பிரிவு மேம்பாலம் அருகே பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் தன் கல்லூரி நண்பர்களுடன் காரில் அதிவேகமாக வந்து எதிரே வந்த காரில் மோதிய விபத்தில் உடன் பயணித்த வீரசுரேகா என்ற பெண் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அவினாசி நீதிமன்றம் காரை ஓட்டிச் சென்ற பிரவீனுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பிரவீன் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த நிலையில் 'இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்காததால் மறு விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரி அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

புகழேந்தி

அந்த மனுவில், `பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கல்லூரி பெண்களுடன் காரில் பயணித்தபோது கார் விபத்துக்குள்ளானதாகவும், ஒரு பெண் உயிரிழந்து மற்றவர்கள் காயம்பட்டதாகவும், எனவே அஜாக்கிரதையாகவும் அதிவேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்பட்டதாக அவிநாசி நீதித்துறை நடுவர் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் பின்புலம் காரணமாக இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. அந்த காரில் கல்லூரி மாணவிகள் பயணித்தது ஏன் என்ற கோணத்தில் விசாரிக்கப்படவில்லை. வழக்கில் காட்டப்பட்ட கார், சம்பவத்தில் ஈடுபட்ட கார் கலர் இல்லை, மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் ஆவணங்களை விசாரணை அதிகாரி முறையாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கொடுத்த மனு நிராகரிக்கபட்டது. எனவே இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொண்டுவர இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மனுதாரரின் மேல் முறையீடு மனு நிலுவையில் உள்ள திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மறு விசாரணை குறித்து அணுகலாம்' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User