முதல்வர் விஜய் உரை: "'தந்தை - மகன்' கதையெல்லாம் தமிழக மக்களுக்குத் தேவையில்லை" - நயினார் நாகேந்திரன்

Sep 07, 2026 - 17:30
0
முதல்வர் விஜய் உரை: "'தந்தை - மகன்' கதையெல்லாம் தமிழக மக்களுக்குத் தேவையில்லை" - நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்யின் பேச்சு குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சட்டமன்றம் உங்கள் சினிமா ஸ்டுடியோ அல்ல திரு. விஜய் அவர்களே! உங்கள் அடுக்கடுக்கான வசனங்களைக் கேட்டு ஆர்ப்பரிப்பதற்கு தமிழக மக்கள் ஒன்றும் உங்கள் கட்சியின் ஆச்சரியக்குறிகள் அல்ல.

உங்கள் கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கிய கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 கொலைகள் நடந்துள்ளன. உங்கள் அலுவலகம் அமைந்துள்ள சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு படுகொலைகள் நடந்துள்ளன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன, பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களில் சிலர் பொதுமக்களைத் தரக்குறைவாக நடத்துகின்றனர், உங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

அப்படியிருக்கையில் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது, இந்த அவலங்களுக்கெல்லாம் நீங்கள் முறையாக பதில் அளித்திருக்க வேண்டும்.

சீரழிந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கு முழுப் பொறுப்பேற்று, மக்கள் பாதுகாப்பிற்கெனப் புதிய திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். மக்களின் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் அளித்திருக்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ஆனால், நீங்களோ “எனக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் எந்தத் தொடர்புமில்லை” என்ற ரீதியில், அதிரடி திரைப்படத்தில் அடுக்கடுக்கான வசனங்கள் பேசுவது போல கத்தி கூப்பாடு போடுவது, அநாகரிகமான அரசியல். எனவே, மக்கள் மன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை மட்டும் பேசுங்கள் முதல்வரே, “தந்தை - மகன்” கதையெல்லாம் தமிழக மக்களுக்குத் தேவையில்லை" என்று விமர்சித்திருக்கிறார் நயினார் நாகேந்திரன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User