"காவிரிக்காக 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம் நாங்கள்; ஆனால் இந்த அரசு..!"- எடப்பாடி பழனிசாமி

Aug 05, 2026 - 15:30
0
"காவிரிக்காக 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம் நாங்கள்; ஆனால் இந்த அரசு..!"- எடப்பாடி பழனிசாமி

தவெக அரசு தங்களது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது.

பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசியதாவது...

லீக்கேஜ்

"நிர்வாகத்தில் நிறைய 'லீக்கேஜ்' இருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த ஆட்சியிலும் சரி, இந்த ஆட்சியிலும் சரி, திட்டங்களைச் செயல்படுத்துவதில் தவறான எஸ்டிமேஷன் கொடுத்துள்ளீர்கள்.

லீக்கேஜை அடைப்போம், லீக்கேஜை அடைப்போம் என்று சொல்லி மக்களை ஏமாற்ற முடியுமே ஒழிய, லீக்கேஜ் எங்கே இருக்கிறது என்பதை அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன்
தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன்

கடந்த ஐந்து ஆண்டுக்காலம் இதே லீக்கேஜைத்தான் அடைக்க வேண்டும் என்று கூறினார்கள். இப்போது இந்த அரசாங்கமும் அதையே பின்பற்றி லீக்கேஜைச் சரி செய்யப் போவதாகக் கூறுகிறது.

ஆண்டுக்கணக்காக அதே அதிகாரிகள் பணியில் இருக்கும்போது, எந்தெந்தத் துறையில், எந்தெந்த வரி வருவாயில் லீக்கேஜ் இருக்கிறது என்பதைத் தெரிவிக்க வேண்டும் அல்லவா?

எவ்வளவு லீக்கேஜ் இருக்கிறது, அதன் மூலம் எவ்வளவு வருவாய் வரும், அதற்கான திட்டமிடல் என்ன என்பது பற்றி எதுவுமே சொல்லாமல் பட்ஜெட்டை அறிவித்துள்ளார்கள்.

பண விவகாரத்தில் தமிழகத்தின் நிதி உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட மாட்டாது என்று சொல்வது மட்டும் போதாது.

காவிரி விவகாரம்

தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு என்ன பயன்? அதிமுக அரசு இருந்தபோது இதற்காக எவ்வளவு நடவடிக்கை எடுத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். அம்மா அவர்கள் காவிரி நதிநீருக்காக உண்ணாவிரதம் இருந்தார்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு காலதாமதம் செய்தபோது, அதிமுக அரசு பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதிலும், அதைப் பார்க்காமல் விவசாயிகள் மற்றும் மக்களின் நலனுக்காக 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கினோம்.

அவ்வாறு கஷ்டப்பட்டுப் பெற்ற உரிமைகளை இந்த அரசால் காப்பாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா

கடன் சுமை...

பழைய திட்டங்களுக்கு 'வெற்றித் திட்டம்' என்று பெயர் மாற்றியுள்ளார்கள். ஏதோ ஒரு சூழலில் வெற்றி பெற்றதையே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பட்ஜெட்டினால் தங்களுக்கு என்ன நன்மை கிடைத்துள்ளது என்பதை மக்கள் சிந்திப்பார்கள். அடுத்த தேர்தலில் உரிய முடிவை எடுப்பார்கள்.

முந்தைய அரசுகள் அதிக கடன் சுமையை ஏற்படுத்தியதால் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் கடன் 1,27,000 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை 56,000 கோடியாகவும் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அதிமுக ஆட்சியில் கடன் அதிகமாகவில்லை.

கட்டமைப்புகள்

வருவாயே இல்லாத காலத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 11 மாதங்கள் ரேஷன் கடைகளில் விலையில்லா உணவுப் பொருள்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1,000 நிதியுதவி வழங்கினோம்.

கொரோனா கால மருத்துவக் கட்டமைப்புகளைச் சீரமைத்தோம், பொங்கல் பரிசுகளை வழங்கினோம்.

ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 27 பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 4 வேளாண்மைக் கல்லூரிகளைக் கொண்டு வந்தோம்.

6 புதிய மாவட்டங்களை உருவாக்கினோம். சாலைகள், பாலங்கள், தடுப்பணைகள் என அனைத்தையும் அதிமுக ஆட்சியில்தான் செய்தோம். புயல் மற்றும் வறட்சிக் காலங்களில் தகுந்த நிவாரணங்களை வழங்கினோம்.

விவசாயம்
விவசாயம்

விவசாயம்

இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான்.

விவசாயிகளின் நலனுக்காகச் சுமார் 18,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்தோம். ஆனால், தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யவில்லை.

மதிப்பெண்

ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட்டுக்கு நான் 'பூஜ்யம்'தான் மதிப்பெண் வழங்குவேன். அண்ணா திமுக ஆட்சியில் எப்படி இருந்தது, திமுக ஆட்சியில் எப்படி இருந்தது, இப்போது இருக்கும் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை ஊடகங்களே ஒப்பிட்டுப் பார்த்து மார்க் போட்டுக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User