Operation Toofan-காக கேரளத்தில் ஒன்றிணையும் விஜய், மோகன்லால்; கேரள முதல்வரின் திட்டம் என்ன?

Jul 16, 2026 - 11:31
0
Operation Toofan-காக கேரளத்தில் ஒன்றிணையும் விஜய், மோகன்லால்; கேரள முதல்வரின் திட்டம் என்ன?

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரள அரசு ஆப்பரேஷன் தூஃபான் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பையும் நாடிவருகிறது கேரள அரசு. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா நேற்று சென்னையில் சந்தித்தார்.

அதுகுறித்து ரமேஷ் சென்னிதலா தனது முகநூலில் பகிர்ந்துள்ள பதிவில், "போதைப்பொருள் மாஃபியாவிற்குக் கடுமையான அதிர்ச்சியை அளிக்கும் வகையில் 'ஆபரேஷன் தூஃபான்' தீவிரமாக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களுடன் இரு மாநிலங்களின் போதைப்பொருள் எதிர்ப்புப் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

நமது 'ஆபரேஷன் தூஃபான்' திட்டத்தை அவர் வெகுவாகப் பாராட்டினார். ​இரு மாநிலங்களும் இணைந்து செயல்படும் என்றும், ரகசியத் தகவல் பரிமாற்றம் மற்றும் எல்லைப் பகுதி ரோந்துப் பணிகளைக் கூட்டாகக் கையாள்வது என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

போதைப்பொருளின் வேர்களை அறுத்தெறிய இனி நம்மோடு தமிழ்நாடு அரசும் இருக்கும். கேரளாவின் பரிசாக, தகழியின் "கயர்" (கயிறு) என்ற புகழ்பெற்ற காவியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்து கொள்கிறேன், நமது இந்த வரலாற்றுப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் விரைவில் கேரளாவிற்கு வருவதாகத் தெரிவித்துள்ளார். ​

'ஆபரேஷன் தூஃபான்' திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக கேரளாவிற்கு வருகை தரும் அவரை இருகரம் கூப்பி அன்போடு வரவேற்கிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

ரமேஷ் சென்னிதலா, முதல்வர் விஜய்
ரமேஷ் சென்னிதலா, முதல்வர் விஜய்

மேலும், கேரளா திரும்பிய ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் அரை மணி நேரத்துக்கும் மேல் சந்திப்பு நடந்தது. ஆபரேஷன் தூஃபானுக்கு அவர் முழு ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் உயர் அதிகாரிகளுடன் இது குறித்த ஆலோசனை நடைபெற்றது.

கேரளா தமிழ்நாடு எல்லைகளை முழுமையாக காவல்துறை கண்காணிப்பில் கொண்டு வரவும், பரஸ்பரம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அதில் தீர்மானிக்கப்பட்டது. போதைப்பொருளுக்கு எதிராக மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டதாக தமிழ்நாடு முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.

கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதல்வர் விஜய்
கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தமிழக முதல்வர் விஜய்

கேரளாவில் ஆபரேஷன் தூஃபான் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் மோகன்லால் உள்ளார். போதைப்பொருளுக்கு எதிராக கைகோர்க்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் நான் கேரளத்திற்கு அழைத்துள்ளேன். மோகன்லாலும் விஜய்யும் ஜில்லா என்ற சினிமாவில் சேர்ந்து நடித்துள்ளார்கள். எனவே, மோகன்லாலும் விஜய்யும் கலந்துகொள்ளும் வகையில் போதைப்பொருளுக்கு எதிராக எர்ணாகுளத்தில் அடுத்தமாதம் ஒரு நிகழ்ச்சி நடத்த முடிவுசெய்துள்ளோம்.

போதைப்பொருள் எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் பங்கெடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நம்முடன் கைகோர்ப்பதாகக் கூறியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். இனி வரும் காலங்களில் தமிழ்நாடு போலீஸும் கேரளா போலீஸும் தகவல்களைப் பரிமாறிக் கொண்டு போதைப்பொருளுக்கு எதிதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User