திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்: கலையழகும் புராண சிறப்பும் வாய்ந்த திருத்தலம்

Aug 05, 2026 - 09:31
0
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்: கலையழகும் புராண சிறப்பும் வாய்ந்த திருத்தலம்

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வழிபட வேண்டிய முருகன் திருத்தலங்களில் முக்கியமானது தேவிகாபுரம். இங்கே கனகிரீஸ்வரர்கோயில், பாலமுருகன் திருக்கோயில் மற்றும் பெரியநாயகரி அம்மன் திருக்கோயில் என அற்புதமான கோயில்கள் அமைந்துள்ளன.

வாருங்கள் அத்தலங்களைத் தரிசிப்போம். சென்னையிலிருந்து ஆரணி - திருவண்ணாமலை செல்லும் வழியில், 160 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

இந்த ஊரின் நடுவே பெரியநாயகி அம்மன் கோயில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் 150 அடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. திருவண்ணாமலையார் கோயிலுக்கு அடுத்த நிலையில் உயரமான ராஜகோபுரம் இதுவேயாகும்.

தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்
தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்

கோயிலின் உட்புறம் அமைந்துள்ள கல்யாண மண்டபம், குதிரைகளுடன்கூடிய தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயின் மதில் சுவர் பிரமாண்டமானது. எனவேதான் ‘தேவிகாபுரம் மதிலழகு’ என்று குறிப்பிடுவார்கள் பெரியோர்கள்.

இந்த மதிற்சுவரில் நீண்ட பெரிய அளவில் இருக்கும் யானை, வராகம், குதிரை, மான், நரி ரிஷபக் குஞ்சரம் போன்ற சிற்பத் தொகுதிகள் வேறெந்த கோயிலிலும் காணக்கிடைக்காத காட்சியாகும்.

மூன்று பிராகாரங்களுடன் அமைந்த இக்கோயிலில் முதல் சுற்றில் உள்ள - ஐந்து கற்களை ஒன்றிணைத்து செய்யப்பட்ட விநாயகர் வடிவம் சிறப்பு அம்சமாகும். வலப்பக்கத்தில் ஆறுமுகன் பன்னிரு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

வலக்கரங்கள் ஆறில் சக்தி, வாள், சூலம், சக்கரம், அங்குசம் முதலியன கொண்டு ஒரு கரத்தில் அபய முத்திரையைக் காட்டி அருள்கிறார். இடக்கரங்களில் வஜ்ரசக்தி, தாமரை, பாசம், தண்டாயுதம், கதை ஆகியவற்றையும், ஒரு கரத்தால் அபய முத்திரையைக் காட்டியும் அருள்கிறார்.

வெளிப்பிராகாரத்தில் பலவிதமான மரங்கள், பூஞ்செடிகள், நட்சத்திர மரங்கள் ஆகியன நன்கு பராமரிப்பில் உள்ளன. இங்குள்ள திருக்குளம் சிவகங்கை தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது.

36 தூண்கள் உள்ள மகா மண்டபத்தில் பெரிய புராணச் சிற்பங்கள், காலசம்ஹார மூர்த்தி, பார்வதி யின் தவம், திருமால் அவதாரங்கள், அர்ச்சுனன் தவம் போன்றவை அமைந்துள்ளன. இதையடுத்துள்ள இரண்டாவது கோபுரம் ஐந்து நிலைகளுடன் திகழ்கிறது.

இரண்டாவது பிராகாரத்தில் உள்ள நடராஜர் மண்டபத்திலும் தூண்சிற்பங்கள் மிக மிக அழகாக உள்ளன. மூன்றாவது பிராகாரத்தில் விநாயகர், விஷ்ணு, வள்ளி தேவசேனை சமேத கந்தப்பெருமான், சண்டேசர் சந்நிதிகளும் உள்ளன. அர்த்த மண்டபத்தில் உள்ள சிற்பத் தொகுதி அற்புதப் படைப்பாகும்.

திருமயிலையில் சம்பந்தர் எலும்பைப் பெண் ஆக்கியது; திருவோத்தூர் (செய்யாறு) திருக்கோயிலில் ஆண் பனையை, பெண் பனையாக்கியது; அவிநாசியில் சுந்தரர் முதலை உண்ட பாலனை (பல ஆண்டுகள் கழித்து) உயிருடன் மீட்டது; மனுவேந்தன் பசுவுக்கு நீதி வழங்கியது; ராமன் அம்பால் மராமரங்களைத் துளைத்தது முதலானவை சிற்பக் கலையின் அருமை பெருமைகளைப் பறைசாற்றுகின்றன.

தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன்
தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன்

மூலஸ்தானத்தில் உலகை ஆளும் பெரிய நாயகியாகிய பிரஹன்நாயகி நான்கு கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருட் சாட்சி வழங்குகிறாள். மேற்கரங்களில் பாசம், அங்குசம் ஏந்திட, முன் இருகரங்கள் அபயவரத முத்திரைகளுடன் உள்ளன.

கனககிரி மலையில் அருளாட்சி செய்யும் பொன்மலை நாதரை தரிசிக்க 302 படிகள் ஏறிச்செல்ல வேண்டும். மலையிலிருந்து சுற்றிலும் பார்த்தால் திருவண்ணாமலை, பர்வதமலை, சம்பத்கிரி மலை, திருமலை ஆகிய மலைகளைக் காணலாம். இத்திருக்கோயிலில் மூன்று நிலைகளுடன்கூடிய ராஜகோபுரம் உள்ளது.

கொடி மரம் தாண்டி உட்பிராகாரத்தில் விநாயகர், அருணகிரியார் பாடிப் பரவிய கனககிரி ஆறுமுகப்பரமன், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னிகையர், விசாலாட்சி, சண்டேசர் ஆகிய சந்நிதிகள் உள்ளன.

மேலே மூலவர் கனககிரீஸ்வரர், சுயம்பு லிங்கத் திருமேனி. இங்கே காசிவிஸ்வநாதர் எனும் லிங்கத் திருமேனியையும் தரிசிக்கிறோம். (மலைமேல் கனக கிரீஸ்வரருக்கு அம்பிகை சந்நிதி இல்லை; மலையடிவாரம் பெரியநாயகியம்மன் கோயிலில் சுவாமி சந்நிதி இல்லை).

இத்தலத்தில் கீழ்க்கோயிலையும் மலைக் கோயிலையும் சென்று தரிசித்தால்தான் சுவாமி, அம்பாள் இருவரையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.

மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் உடனுறை திருக்காமேஸ்வரர் கோயில் தனியே அமைந்துள்ளது. ஒன்பது கற்களால் கட்டப்பெற்ற இக்கோயிலைச் சிம்மத் தூண்கள் தாங்கி நிற்கின்றன. கருவறையைச் சுற்றிலும் கோஷ்ட மூர்த்தங்கள் உள்ளன.

விஜயநகர அரசர்கள் கலைப்பாணியில் அமைந்த அழகான கோயில். கனககிரி கோயில் அருகில் உள்ள சிறு குன்றில் பாலமுருகன் திருக்கோயில் ஒன்று கட்டப்பெற்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளால் 1973-ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றுள்ளது.

தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்
தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோயில்

இங்கு பங்குனி உத்திரப் பெருவிழா பத்து நாள்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இதைத் தவிர ஒவ்வொரு மாதமும் விசேஷ நாள்களில் அபிஷேக வழிபாடும் தை மாதம் பூசத்தன்று சேக்கிழார் விழாவும் நடத்திவருகிறார்கள். கார்த்திகைத் தீபத்தன்று கனககிரி மற்றும் பாலமுருகன் மலையைச் சுற்றிலும் கிரிவலம் வருவதும் உண்டு.

இந்த ஆடிக்கிருத்திகையில் வாய்ப்பிருக்கும் அன்பர்கள் தேவிகாபுரம் சென்று கனககிரீஸ்வரரையும் பெரியநாயகரி அம்மனையும் சேனாதிபதியாகத் திகழும் ஆறுமுகரையும் வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User