தஞ்சாவூர்: ”குடும்பபே சின்னாபின்னமாகிடும்” - புகார் அளித்தவரை மிரட்டிய மருத்துவமனை உரிமையாளர் கைது

Jul 26, 2026 - 13:30
0
தஞ்சாவூர்: ”குடும்பபே சின்னாபின்னமாகிடும்” - புகார் அளித்தவரை மிரட்டிய மருத்துவமனை உரிமையாளர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதி அருகே உள்ள நீலகிரி ஊராட்சியின், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வள்ளியம்மை. இவரது கணவர் ஆர்.எம்.பாஸ்கரன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த திமுக ஆட்சியின்போது திமுகவில் சேர்ந்தவர் பின்னர் மீண்டும் யூடர்ன் அடித்து அதிமுக-வில் இணைந்து விட்டார்.

தலைமையில் நடக்கும் உட்கட்சிப் பிரச்னையால் இப்போது கட்சியில் ஆக்டீவாக இல்லை என்கிறார்கள். தஞ்சாவூர் தவெக எம்.எல்.ஏ விஜய் சரவணனுடன், பாஸ்கரன் நெருக்கம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.

மருத்துவமனை உரிமையாளர் பாஸ்கரன்
மருத்துவமனை உரிமையாளர் பாஸ்கரன்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே A to Z என்ற மருத்துவமனையை பாஸ்கரன் நடத்தி வருகிறார். தஞ்சாவூர் சுங்காந்திடல் பகுதியைச் சேர்ந்த திருமாறன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்.

இவர் A to Z மருத்துவமனை உரிய விதிகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர், நகர் ஊரமைப்புப் பிரிவு, மாநகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து A to Z மருத்துவமனையின் பங்குதாரர்களின் ஒருவர் எனச் சொல்லப்பட்டும் பாஸ்கரனின் அண்ணன் மகன் சரவணன், திருமாறனுக்கு போன் செய்து, 'யாரைக் கேட்டு பெட்டிஷன் போட்டீங்க? உங்க மீது கேஸ் போட்டால் ரொம்ப சிரமப்பட்டு போயிடுவீங்க. மெடிக்கல் ஆக்டில் கேஸ் கொடுத்தால் பத்து வருடம் வெளியே வர முடியாது.

குடும்பமே சின்னாபின்னமாகிடும். இதுமாதிரி செஞ்சவங்க என் காலில் விழுந்து கெஞ்சுகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் டிஸ்மிஸ் ஆகியிருக்கு தெரியுமா?

அதிகாரிகள் சர்டிபிகேட் கொடுத்தனர். நல்ல விஷயங்களுக்குத் துணை போங்க. உங்களைப் பத்தி விஏஓ நல்ல விதமா சொல்றார். நீங்க இதில் ஈடுபடாதீர்கள். அதிகாரிகள் உங்க மீது கோபமா இருக்காங்க. ஆணையர் கூட புடிச்சி உள்ளே போட்டுடுவோம் என்று சொன்னார்'' எனத் திருமாறனை மிரட்டியிருக்கிறார்.

இதேபோல் பாஸ்கரனும் போன் செய்து, ''லைசென்ஸ் இல்லை, ஆபரேஷன் தியேட்டட் இல்லைனு பெட்டிஷன் போட்டிருக்கே. உனக்கு ஆஸ்பிட்டல பத்தி தெரியுமா? பெட்டிஷன் போட்டா பெரிய ஆளா. பிடிச்சி லாடம் கட்டச் சொல்லிடுவேன். ரொம்ப மோசமா போயிடும்.

Tanjore
Tanjore

நீ யார்னு தெரியும். உன்னை மாதிரி புறம்போக்கு இல்லை நான். நீ எனக்கு தகுதியான ஆள் கிடையாது. தொலைச்சுபுடுவேன்'' என்று தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டியிருக்கிறார்.

இது தொடர்பான ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை உண்டாக்கியுள்ளன.

இந்நிலையில் ஆர்.எம்.பாஸ்கரன் சாதி ரீதியாக என்னைத் திட்டியதாக மத்திய மண்டல ஐ.ஜியிடம் திருமாறன் புகார் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து மத்திய மண்டல ஐ.ஜி உத்தரவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் பாஸ்கரன் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பாஸ்கரனைக் கைது செய்தனர்.

இந்நிலையில் உடல் நலக்குறைபாடு காரணமாக பாஸ்கரன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User