கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் : தென்னக அயோத்தி... ராமாயண ஓவியங்கள்... வேண்டிய வரம் தரும் சந்நிதி!

Apr 11, 2026 - 08:02
 0
கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில் : தென்னக அயோத்தி... ராமாயண ஓவியங்கள்... வேண்டிய வரம் தரும் சந்நிதி!

அயோத்தி ராமபிரான் அவதரித்த தலம். வாழ்வில் ஒருமுறையேனும் அனைவரும் தரிசிக்க வேண்டிய தலம். அந்தத் தலத்துக்கு இணையான புண்ணியத்தைத் தரும் தலம் கும்பகோணத்தில் உள்ளது. இங்கு சென்று ஸ்ரீராமபிரானை தரிசனம் செய்தால் அயோத்தி சென்ற பலன் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள். அதனாலேயே அதற்குத் தென்னக அயோத்தி என்றே பெயர். வாருங்கள் அந்த அற்புதத் தலம் குறித்து அறிந்துகொள்வோம்.

கும்பகோணத்தின் மத்தியில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். கும்பகோணம் மாநகரின் மத்தியில் பெரிய கடைவீதியின் தென்கோடியில் ஐந்து நிலை கோபுரமும் பரந்து விரிந்த பிராகாரமும் கொண்ட கோயிலாக இது விளங்கிவருகிறது. இங்கே ராமபிரான் பூலோகச் சக்கரவர்த்தியாக பட்டாபிஷேக கோலத்திலேயே அருள்கிறார். எனவே இவரை வழிபட்டால் பதவி யோகம், சொல்வாக்கு, அரசபோக வாழ்வு என அனைத்தும் கிடைக்கும் என்கிறார்கள்.

கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில்

பூலோக வைகுந்தம் என்றும் இந்தத் தலம் போற்றப்படுவதால் இந்த ஆலயத்தின் பிராகாரத்தில் மூன்று முறை வலம் வந்தாலே சம்பூர்ணமாக ராமாயணத்தை முழுமையாகப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை நியாயமான செல்வங்களும் நீதியும் கிடைத்துவிடும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தை வலம் வந்து வேலை, பதவி, சாதகமான தீர்ப்பு, மங்கல காரியங்கள் எனப் பலவும் அடைகிறார்கள் பக்தர்கள்.

கி.பி 1614-ம் ஆண்டு இந்த ஆலயம் தஞ்சை ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. ராமபக்தரான இவர் தினமும் ராம சரிதத்தைக் கேட்டும் படித்தும் இன்புற்று வாழ்ந்தார். பண்டிதர்கள் ராம கதையைப் படிக்கும்போதும் சொல்லும்போதும் மெய்சிலிர்த்து, அந்தப் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே தாம்பூலம் மடித்துக்கொடுத்து மகிழ்வாராம். இதனால் `அனுவிரத ராம கதாம்ருத சேவகன்' என்ற சிறப்புப் பெயரே உண்டானதாம்.

இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாக கருவறையில், ஸ்ரீராமரும் சீதா பிராட்டியும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி தர, பரதன் குடைபிடிக்க, சத்ருக்னன் சாமரம் வீச, லக்குவணன் ஸ்ரீராமரின் வில்லைத் தாங்கி நிற்கும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர். அனுமனோ வேறெங்கும் காண இயலாதவகையில் ஆனந்த நிலையில் அருளுகிறார். ஸ்ரீராமரையும் சீதாவையும் தரிசித்தபடி கருவறை வலப்புறத்தில் அமர்ந்திருக்கிறார் அனுமன். இவரின் திருக்கரத்தை வீணை அலங்கரிக்கிறது. சதா சர்வ காலமும் ராமநாமத்தை அவரது சந்நிதியில் அமர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்யும் சிரஞ்சீவியாக அனுமன் அருள் பாலிக்கிறார். இங்கே நின்று உள்ளம் உருக ராம நாமத்தை உச்சரிப்பவர்கள், இகபர சுகங்களை அடைவதோடு அனுமனின் பாதுகாப்பிலும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில்

இங்குள்ள அர்த்த மண்டபத்தில் சிற்ப வடிவில் கரம் கூப்பி வழிபடும் கோலத்தில் காட்சி தருகிறார் கோவிந்த தீட்சிதர். இவர்தான் இந்த ஆலயத் திருப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட மகான்.

காசிக்கு நிகரான புனிதமும் அயோத்திக்கு நிகரான பெருமையும் கொண்ட இந்தக் கோயில் சிற்ப அழகிலும் தன்னிகரற்று விளங்கிவருகிறது. அதில் மிகவும் சிறப்பானவை மகாமண்டபச் சிற்பங்கள் மற்றும் பிராகார ஓவியங்கள். முக்கியமாகப் பிராகாரத்தில் உள்ள ராமாயணக் காட்சிகளைச் சித்திர வடிவில் தரிசித்தபடி ஒருமுறை வலம் வந்தால் முழுமையாக ராமாயணத்தைப் பாராயணம் செய்த திருப்தியும் பலனும் கிடைத்துவிடும். முன் மண்டபத்தில் உள்ள 62 தூண்களும் சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. அதில் பெருமாளின் பல்வேறு அவதார வடிவங்களும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

அட்சய திருதியை நாளில் கும்பகோணத்தில் நடைபெறும் 14 கருடசேவை விழாவில் இந்த ராமசாமியும் கருடன் மீதேறி அருளுவார். அவருடன் கும்பகோணம் சார்ங்கபாணி, சக்கரபாணி, ராஜ கோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரஹாரம் ஸ்ரீபட்டாபிராமர், மல்லுக தெரு ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணன், நவநீத கிருஷ்ணன், புளியஞ்சேரி ஸ்ரீவேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீநிவாசப் பெருமாள், மேலக்காவேரி வரதராஜப் பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி உள்ளிட்ட 11 பெருமாள்களும் எழுந்தருளி சேவை சாதிப்பார்கள். இங்கு ராம நவமி உற்சவம் வெகு பிரசித்தம்.

கும்பகோணம் ஸ்ரீராமசாமி கோயில்

இங்கே கோயில்கொண்டுள்ள பட்டாபிஷேக ராமரை தரிசித்தால் நியாயமான அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது உறுதி. எனவே வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை கும்பகோணம் சென்று ராமசாமி கோயிலை தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0