"தமிழ்நாட்டிற்குள் முகமூடி அணிந்து நுழைய பார்க்கிறது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்" - ராகுல் காந்தி

Apr 19, 2026 - 14:31
 0
"தமிழ்நாட்டிற்குள் முகமூடி அணிந்து நுழைய பார்க்கிறது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்" - ராகுல் காந்தி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துறையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அதில் பேசிய அவர்,

ragul ganthi

"தமிழ்நாட்டில் நடைபெற இருப்பது வழக்கமான தேர்தல் இல்லை. முற்றிலும் வேறுபட்ட தேர்தல். பா.ஜ.க வால் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது எனத் தெரிந்து அ.தி.மு.க என்ற போர்வையை அணிந்து கொண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைய பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அவரை மாற்றி விட்டு அ.தி.மு.க-விலிருந்து பொம்மை முதல்வரை அமர வைக்கப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க முன்பு சிறப்பான கட்சியாக இருந்தது. ஆனால், இன்று அந்த நிலை மாறிவிட்டது. தமிழ்நாட்டிற்குள் முகமூடி அணிந்து நுழையப் பார்க்கிறது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க தமிழ் மக்களின் கலாசாரம், மொழி, வாழ்வியலை சிதைக்கப் பார்க்கிறது.

தமிழ் மொழி சாதாரணமான மொழி அல்ல. அது, தமிழர்களின் ஆன்மா. தமிழர்கள் அறிவாளிகள். அறிவாளிகளை பா.ஜ.க-விற்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் பிடிக்கவில்லை. அ.தி.மு.க-வினர் தாங்கள் செய்த ஊழல்களிலிருந்து தப்பவே பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்கள். சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அரசின் முகமைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது பா.ஜ.க. ஆனால், இதற்கெல்லாம் தமிழ்நாடு முதல்வரும், எனது அருமை சகோதரருமான ஸ்டாலின் பயப்பட மாட்டார். தி.மு.க-வின் கொள்கைகளையும், தமிழ்நாட்டின் கொள்கைகளையும் என்றும் அவர் கைவிடமாட்டார். அவரது தலைமையில் தமிழ்நாடு பாதுகாப்பாக உள்ளது. நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறு வரையறை சட்டத்தை நுழைக்க முயற்சித்தது பா.ஜ.க. பா.ஜ.க-வினர் எப்போதும் தங்களுக்கு ஏதுவாகவே அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றிக் கொள்ள பார்க்கின்றனர்.

ragul ganthi

ஆனால், கூட்டணி கட்சிகள் ஒன்றாக நின்று அந்த சதி திட்டத்தை முறியடித்து விட்டோம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்ற முயன்ற பா.ஜ.க-வின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் முகத்தை மக்கள் நாடாளுமன்றத்தில் பார்த்திருப்பார்கள். தோல்வியின் பிரதிபலிப்பாகவே பிரதமர் மோடியின் முகம் இருந்தது. பா.ஜ.க மக்கள் மத்தியில் மத, இன, மொழி கலாசார வேறுபாடுகளை திணித்து மக்களின் ஒற்றுமையை சிதைக்க பார்க்கிறது. குறிப்பாக, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என சிறுபான்மையினர்களை பிரித்து ஆதாயம் தேட நினைக்கிறது. முழுமையாக இரண்டு தனியார் நிறுவனங்களை மட்டும் நம்பி பா.ஜ.க செயல்படுகிறது. அவர்களுக்காக நாட்டின் வளர்ச்சியே சமரசம் செய்ய தயாராகிவிட்டார் பிரதமர் மோடி. இப்போது, தமிழ்நாட்டில் நிலவும் சமூக நீதி அவர்களுக்கு பிடிக்கவில்லை.

தமிழ்நாட்டின் பாதை சமூக நீதிப் பாதை, சமத்துவ பாதை. அதை சீரழிக்க பா.ஜ.க முயற்சிக்கிறது. தமிழ்நாடு தான் சமூக நீதி, மகளிர் வளர்ச்சி ஆகியவற்றிற்கு முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு திகழ்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி உள்ளார். அவர் கூறுவதை அப்படியே செய்ய பிரதமர் மோடி செய்கிறார். அவர் குதி என்று சொன்னாலும் பிரதமர் குதிப்பார். இப்போது மோடி அமெரிக்காவின் பிரதிநிதியாக இந்தியாவில் உள்ளார். நமது நாட்டின் விவசாயிகளை, தொழிலாளர்களை தரவுகளை சிறு குறு தொழில்களை அமெரிக்காவிற்கு விற்று விட்டார் பிரதமர் மோடி. எஃப்ஸிடின் மூலம் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் பணிய வைத்துள்ளார். தான் ட்ரம்பிற்கு பணிந்து இருப்பது போலவே தனக்கு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி பணிந்து இருக்க வைத்துள்ளார். இப்போது நான் கூறுகிறேன் தமிழ்நாட்டிற்குள் பா.ஜ.க-வாலும், ஆர்.எஸ்.எஸ்ஸாலும் நுழைய முடியாது.

ragul ganthi

தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அதை அனுமதிக்காது. தமிழ்நாட்டிற்கும், எனக்கும் இருக்கும் பந்தம் மக்களாகிய உங்களுக்கு தெரியும். எனது தாத்தா, தந்தை, தாயார் தொட்டு இன்று நான் தமிழக மக்களுடன் நிற்கிறேன். தமிழக மக்களுக்கும் எனக்கும் உள்ள பந்தம் பாசம் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. தமிழ்நாட்டு மக்களின் டெல்லி பிரதிநிதியாக நான் என்றும் இருப்பேன். குறிப்பாக சொன்னால் தமிழ்நாட்டு மக்களின் சிப்பாயாக டெல்லியில் நான் இருப்பேன். தமிழ்நாடு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யவும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் நான் போராடுவேன். தமிழ்நாடு மக்களை பார்க்க எனக்கு பெருமையாக உள்ளது. இந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸை, பா.ஜ.க-வை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அகற்றும். மக்களாகிய நீங்களும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைப் போல் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் சிறப்பான உழைப்பை நாம் கொடுக்க வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியின் முடிவில் ராகுல் காந்திக்கு அரிசி நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அப்போது, "அதை நான் நிச்சயம் சமைத்து சாப்பிடுவேன்" என ராகுல் காந்தி அறிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0