திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட்; சூடு பிடிக்கும் பழனி கோவில் நில விவகாரம்

Jul 16, 2026 - 07:31
0
திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட்; சூடு பிடிக்கும் பழனி கோவில் நில விவகாரம்

​திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமாக, பழனி அடிவாரத்தில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை எவருக்கும் விற்பனை செய்யவோ அல்லது வில்லங்கப்படுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. இச்சொத்தின் மீது தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடந்து வந்த நிலையில், பழனி கோயில் நிர்வாகம் கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த நிலத்தை முழுமையாகக் கையகப்படுத்தியது.

தற்பொழுது இந்த இடம் பக்தர்களின் பயன்பாட்டிற்காகக் 'கட்டணமில்லா இலவச வாகன நிறுத்துமிடமாக' மாற்றப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த நிலத்திற்கு பழனி கோயில் இணை ஆணையரே தக்காராக நீடிப்பார் என்று பழனி முதன்மைச் சார்பு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே தங்களது தீர்ப்புகளின் மூலம் மிகத் தெளிவாக உறுதி செய்திருந்தன.

​இத்தகைய சட்டப்பாதுகாப்புகளையும் மீறி, கடந்த ஜூலை 6, 2026 அன்று இந்த நிலம் தனிநபர்கள் பெயரில் சட்டவிரோதமாகப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனி இணை சார்பதிவாளர் பணி மாறுதலில் சென்ற நிலையில், அந்தப் பதவிக்குக் கூடுதல் பொறுப்பில் வந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் என்பவர், எந்தவித ஆவணங்களையும் சரிபார்க்காமலும், நீதிமன்ற உத்தரவுகளுக்கு முற்றிலும் புறம்பான வகையிலும், தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து இந்தச் சட்டவிரோதப் பதிவை மேற்கொண்டுள்ளார்.

ஜஸ்டின் மணிகண்டன்
ஜஸ்டின் மணிகண்டன்

'திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அண்ட் தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட்' நிர்வாகி எனக் கூறிக்கொள்ளும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் மூலம், உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இரு நபர்களுக்கு இந்த நிலம் மோசடியாகக் கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், உடனே சார்பதிவாளார் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யபட்டதோடு, நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய வெள்ளதுரை, சேதுபதி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்

இதையடுத்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கவே அவரைக் கைது செய்ய தடைவிதித்தது நீதிமன்றம்.

சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனைத் தொடர்ந்து நேற்று மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் சஸ்பெண்ட் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அடுத்தடுத்து இரண்டு சார்பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User