தவெக: "குதிரைபேர அரசியலை காங்கிரஸார் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது" - ஜோதிமணி கண்டனம்

May 26, 2026 - 12:02
0
தவெக: "குதிரைபேர அரசியலை காங்கிரஸார் யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது" - ஜோதிமணி கண்டனம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் நேற்று (மே.25) இணைந்தனர்.

இதனை அரசியல் தலைவர்கள், "தவெக குதிரை பேரம் செய்கிறது" என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் குதிரை பேரம் அரசியல் குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்
தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "த.வெ.க-வுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் மக்கள் த.வெ.க-வின் தலைவர் திரு.C. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராக்கியுள்ளார்கள்.

அவர் ஒரு சிறப்பான அரசாங்கத்தைத் தரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார் என்பதற்கான முகாந்திரங்கள் தெளிவாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியைத் தருவதற்கு ஒரு கூட்டணி கட்சியாக நிச்சயம் நாம் அவருக்குத் துணை நிற்போம். ஆனால் அதற்காக த.வெ.க தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்க முடியாது. அந்த வழிமுறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக இருக்கவேண்டும். பலவீனப்படுத்துவதாக இருக்கக் கூடாது.

இம்மாதிரியான சூழலில் மாற்றுக் கருத்துகள் நமக்கு இருக்குமேயானால் அதைத் தயங்காமல் வெளிப்படுத்துவதுதான் தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சரியானது. தோழமை சுட்டுதல் என்று தமிழ் இலக்கியம் அதை அழகாகச் சொல்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

குதிரைபேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்ய தேர்ந்தெடுத்த பல்வேறு மாநிலங்களில் பாஜக மக்கள் தீர்ப்பிற்கு எதிராக, குதிரை பேரத்தைப் பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமலும், அமைத்தாலும் ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க முடியாமலும் தடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழ்நாட்டிற்கு வெளியே எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்கமுடியாது. ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் கட்சி செயல்பாடுமேயானால் அது காந்திக்கும் நேருவுக்கும் கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் ராகுல் காந்தி

தலைவர் ராகுல்காந்தி கொள்கைக்காக சமரசமற்றுப் போராடி வருகிற சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்கமுடியாது" என்று பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User