’தவெக-வின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சிகளின் காப்பி பேஸ்ட் பட்ஜெட்’ – வானதி சீனிவாசன் சாடல்

Aug 05, 2026 - 15:30
0
’தவெக-வின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சிகளின் காப்பி பேஸ்ட் பட்ஜெட்’ – வானதி சீனிவாசன் சாடல்

தவெக அரசின் பட்ஜெட் தொடர்பாக பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டசபையில்  நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த த.வெ.க அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பெயர்களை மட்டும் மாற்றி நிதி ஒதுக்கீட்டினை குறைத்தும், சில திட்டங்களுக்கு கூடுதலாகவும் ஒதுக்கியிருக்கிறது. த.வெ.க அரசின் பட்ஜெட்டில் மாற்றம் கிடைக்கும் என்று மக்கள் காத்திருந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை மட்டுமே அளித்திருக்கிறது. வெறும் காற்றடைத்த பலூனாக மட்டுமே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன்

இலவச மடிக்கணினி, திருமண நிதி உதவி, மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அனைத்தும் கடந்த அரசுகளின் திட்டங்களின் தொடர்ச்சியே தவிர, இந்த அரசின் புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் எந்தவிதமான புதுமையும் இதில் இடம்பெறவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, குடும்பத்திற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்குவதற்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் போன்ற வாக்குறுதிகளை அளித்துதான் த.வெ.க ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்த முக்கியமான வாக்குறுதிகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை.

தமிழகத்தின் நிதிநிலை ஏற்கெனவே கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. கடன் சுமை அதிகரித்து வரும் இந்த சூழலில், மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்கான வலுவான பொருளாதாரத் திட்டங்கள், தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு இந்த பட்ஜெட்டில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. இதனால் எதிர்கால தலைமுறையின் மீது கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலான த.வெ.க அரசின் நிதி நிர்வாக அணுகுமுறை தமிழகத்தின் வளர்ச்சிக்கு உகந்ததாக அமையாது. மேலும், பட்ஜெட் உரையின் பெரும்பாலான பகுதிகளில் முதலமைச்சரை புகழ்ந்து பேசுவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. மொத்தத்தில் இது மக்களுக்கான பட்ஜெட் உரையா? அல்லது முதலமைச்சரின் புகழ்பாடும் உரையா? என்ற கேள்வி எழுகிறது.

மரிய வில்சன்
மரிய வில்சன்

தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு புதிய வழியைக் காட்டும் தொலைநோக்கு பார்வையோ, மாநில வளர்ச்சிக்கான புதிய திட்டங்களோ, இளைஞர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்கால நம்பிக்கையை உயர்த்தும் செயல்திட்டங்களோ இல்லாத வெற்று நிதிநிலை அறிக்கையாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. மாற்றத்திற்கான சிறப்பான தருணமாகக் கருதப்பட்ட தமிழகத்தின் முதல் பட்ஜெட் என்ற வரலாற்று வாய்ப்பை த.வெ.க அரசு முழுமையாக தவறவிட்டுள்ளது என்பது ஏமாற்றத்திற்குரியது. எனினும் கடந்த அரசைப் போல் அல்லாமல் மத்திய அரசுடனான மோதல் போக்கினை கைவிட்டு, சோலார் மின் உற்பத்தி உள்ளிட்ட சில திட்டங்கள் வாயிலாக கைகோர்த்து திட்டங்களை அறிவித்திருப்பதை வரவேற்கலாம். மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்த வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து த.வெ.க அரசு இன்னும் பல மக்கள் நலத் திட்டங்களைச் செயலாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User