சாலமன் பாப்பையா: "சில நேரங்களில் கோபப்படுவேன். இது சரியில்லை என்று... ஆனால் அவர்.!"- கலங்கிய ராஜா
மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக்குறைவால் நேற்று(செப்.11) காலமானார்.
அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பட்டிமன்ற ராஜா, " அவர் மேடையில் பேசும்போது ஒரு ரசிகனாக நான் தரையில் அமர்ந்து பார்த்திருக்கிறேன்.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரைப் பாராட்டுவதை நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். அவருக்கு கிடைத்த விருதுகள் மேன்மைகள் எல்லாவற்றிலும் நான் கூடவே இருந்திருக்கிறேன்.
புகழ் இல்லாத 70, 80 களில் பஸ், ரயில்களில் பயணம் செய்திருக்கிறோம். அந்தக் கடுமையான பயணங்களைக் கூட சந்தோஷமாக எடுத்துக்கொள்வார்.
சில நேரங்களில் நானே கோபப்படுவேன். இது சரியில்லை என்று... ஆனால் அவர் ஒரு நாளும் கோபப்பட்டது இல்லை. 'ஏழைகள் அவர்கள் கஷ்டப்பட்டு நிகழ்ச்சி செய்கிறார்கள் நமக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கக்கூடாது ' என்பார்.
இருப்பதை அனுசரித்து கொள்ள வேண்டும் என்பார். என்னையும், பாரதியையும் பிள்ளைகளாகவே பார்த்துக்கொண்டார். ஒரு நாள் கூட கடிந்து பேசியது கிடையாது.

அவருக்கு என்ன மரியாதை கிடைக்கிறதோ அது எல்லாப் பேச்சாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர். தமிழ் இருக்கும் வரை தமிழறிஞர் பாப்பையா அவர்களின் நினைவு இருக்கும்.
அவரோடு இருந்த காலம் எங்களின் பூர்வ ஜென்ம புண்ணியம். அவர் இல்லை என்பது ஒரு வெறுமை தான்" என்று கலங்கி பேசியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)