``என்னை எப்படியாவது காப்பாத்துங்க; சித்ரவதை செய்யுறாங்க.!"- குவைத்தில் தவிக்கும் கள்ளக்குறிச்சி பெண்

Sep 04, 2026 - 16:31
0
``என்னை எப்படியாவது காப்பாத்துங்க; சித்ரவதை செய்யுறாங்க.!"- குவைத்தில் தவிக்கும் கள்ளக்குறிச்சி பெண்

குவைத்தில் வீட்டு வேலைக்குச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் அங்கே கடுமையாகச் சித்ரவதை செய்யப்படுவதாகவும், கடந்த இரண்டு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறி உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வனிதா (35). இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கி, பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடன் வனிதா வெளிநாடு செல்ல முடிவெடுத்தார். இதற்காக ஒரு ஏஜென்ட்டை அணுகியுள்ளார்.

குவைத்

அதன் மூலம், மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் குவைத் நாட்டிற்குச் சென்றார். குவைத் சென்ற சில நாட்களிலேயே ஏஜென்ட் தன்னை ஏமாற்றிவிட்டதை வனிதா உணர்ந்துள்ளார். அவர் தங்கியிருந்த வீட்டில் அவருக்குக் கடுமையான உடல் ரீதியான மற்றும் மன ரீதியான சித்ரவதைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு உரிய ஊதியமும் வழங்கப்படவில்லை. ஒரு சிறிய, நெருக்கடியான அறையில் அடைத்து வைக்கப்பட்டு, தாங்க முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``என் பெயர் வனிதா. நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவள். இங்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. என்னைச் சித்ரவதை செய்கிறார்கள்; இரண்டு மாதமாகச் சம்பளமும் தரவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மேடம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தான் என்னை மீட்டு, என் தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும்" எனப் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறை

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, வனிதாவின் தாய் வெண்ணிலா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். "ஏஜென்ட் என் மகளை ஏமாற்றிவிட்டார். அவளை உயிருடன் மீட்டுத் தாருங்கள்" என அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஷாநவாஸ், ``வனிதா கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரிடம் புகார் பெறப்பட்டு, வெளியுறவுத்துறை மற்றும் உரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரைப் பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது." என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User