கேரள மாநில பெயர் 'கேரளம்' என மாற்றும் மசோதா மக்களவையில் நிறைவேறியது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Aug 12, 2026 - 10:00
0
கேரள மாநில பெயர் 'கேரளம்' என மாற்றும் மசோதா மக்களவையில் நிறைவேறியது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

கேரள மாநிலத்தின் பெயரை `கேரளம்' என மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடங்கி பல்வேறு நடவடிகைகள் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று மக்களவையிலும் கேரளம் பெயர் மாற்றம் சம்பந்தமான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனி குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு பெயர் மாற்றம் முழுமையாக அமலுக்கு வரும். பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து, ஆங்கிலத்தில் 'கவர்ன்மென்ட் ஆஃப் கேரளம்' (Government of Keralam) என்றும், மலையாளத்தில் 'கேரளம் சர்க்கார்' என்றும் மாற்றப்பட வேண்டும். கேரள சட்டப்பேரவை இனி 'கேரளம் சட்டப்பேரவை' என்று அழைக்கப்படும். தலைமைச் செயலகம் முதல் கிராம அலுவலகங்கள் வரையிலான அனைத்து அரசு அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள், முத்திரைகள், லெட்டர் பேடுகள், இணையதளங்கள், மொபைல் செயலிகள், மற்றும் லோகோக்கள் என அனைத்தும் மாற்றப்பட வேண்டியிருக்கும்.

கேரள உயர்நீதிமன்றம்

சான்றிதழ்கள், அரசிதழ்கள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் புதிய பெயரில் அச்சிடப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களின் பெயர்களும் மாறும். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பெயருடன் கேரளம் என சேர்க்கப்படும். பல்வேறு ஆணையங்கள் மற்றும் நலநிதிகளின் பெயர்களும் மாற்றப்படும். பெயர் மாற்றத்துக்காக பெருமளவில் நிதிச் சுமை ஏற்படும் என கருதப்படுகிறது. ​பல்கலைக்கழகங்களின் பெயர்களை மாற்றுவதற்குச் சட்டத் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்.

கேரளம்

நீதிமன்ற வழக்குகளில் மாநிலத்தின் பெயர் மாறும். இதுவரை பதிவான வழக்குகளில் 'கவர்ன்மென்ட் ஆஃப் கேரளா' என்று குறிப்பிடப்பட்டிருப்பது அப்படியே தொடரும். ஆனால், கேரளம் என்ற பெயர் மாற்றம் அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் புதிய வழக்குகளில் 'கவர்ன்மென்ட் ஆஃப் கேரளம்' என்றே குறிப்பிடப்படும். ​அதேவேளையில், 'கேரள உயர் நீதிமன்றத்தின்' பெயர் மாறுவதற்கு வாய்ப்பில்லை. பாம்பே, மதராஸ், கல்கத்தா, கவுகாத்தி உயர் நீதிமன்றங்கள் இன்னமும் பழைய பெயர்களிலேயே இயங்கி வருகின்றன. உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்ற வேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் தனியாகச் சட்டமியற்றப்பட வேண்டும். அலகாபாத் நகரத்தின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்ட போதிலும், அங்குள்ள உயர் நீதிமன்றம் இன்னமும் பழைய பெயரிலேயே இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User