தெலங்கானா Vs பாகிஸ்தான்? - பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!

Apr 16, 2026 - 19:31
 0
தெலங்கானா Vs பாகிஸ்தான்? - பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பேச்சால் பரபரப்பு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், மக்களவை உட்பட, இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு இன்று தொகுதி மறுவரையறை மசோதா 2026 மக்களவையில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா தென்னிந்திய மாநிலங்களின் உரைமையை பறிப்பதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு விளக்கமளித்த மத்திய பா.ஜ.க அரசு, `யாரும் அநியாயமாக நடத்தப்பட மாட்டார்கள்' என சமாதானம் கூறியது.

தேஜஸ்வி சூர்யா
தேஜஸ்வி சூர்யா

இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யா மசோதாவுக்கு ஆதரவாக உரையாற்றினார். அப்போது, ``கடந்த காலத்தில் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட விதம் மோசமானது. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டதைப் போலவே தெலங்கானாவும் பிரிக்கப்பட்டது. இந்தப் பிரிவினையில் குறைந்தபட்ச அறிவியல் தரநிலைகள் கூட பின்பற்றப்படவில்லை. எனவே, காங்கிரஸால் செய்யப்பட்ட ஆந்திரப் பிரதேசப் பிரிவினை, ஆங்கிலேயர்களால் செய்யப்பட்ட நாட்டின் பிரிவினையைவிட மோசமானது." என உரையாற்றினார்.

எம்.பி.தேஜஸ்வி சூர்யாவின் இந்த உரை தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தெலங்கானா மாநில அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தெலங்கானா அமைச்சர் பொன்னம் பிரபாகர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ``தெலங்கானா ஒரு ஜனநாயக மற்றும் அரசியலமைப்புச் செயல்முறையின் மூலம் உருவான மாநிலம். இதனை நாட்டின் துயரமான பிரிவினையுடன் ஒப்பிடுவது அந்தப் போராட்ட வரலாற்றையும், தியாகிகளின் நினைவையும் இழிவுபடுத்துவதாகும். எனவே, இக்கருத்தை நாடாளுமன்றப் பதிவேட்டிலிருந்து நீக்க வேண்டும். தேஜஸ்வி சூர்யா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரத ராஷ்டிர சமிதி - கவிதா
BRS - K Kavitha

முன்னாள் அமைச்சரும் பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ-வுமான ஹரிஷ் ராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சுமார் 4 கோடி தெலங்கானா மக்களின் உணர்வுகளை பா.ஜ.க புண்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் குறித்த புரிதல் இன்றிப் பேசப்பட்ட பேச்சு. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தியாகத்தால் உருவான மாநிலத்தை பாகிஸ்தானுடன் ஒப்பிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது." எனத் தெரிவித்திருக்கிறார்.

பி.ஆர்.எஸ் கட்சியின் மேலவை உறுப்பினர் (MLC) கவிதா, ``மாநில அந்தஸ்துக்காக உயிரைத் தியாகம் செய்தவர்களின் நினைவைக் களங்கப்படுத்திவிட்டார் தேஜஸ்வி சூர்யா. தெலங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர்களான ஜி. கிஷன் ரெட்டி மற்றும் பண்டி சஞ்சய் குமார் ஆகியோர், தங்கள் மாநில மக்களின் சுயமரியாதையைக் காக்க முடியாவிட்டால் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" எனக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தற்போது இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தெலங்கானா அரசியல் வட்டாரம் பரபரப்பாகியிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0