T20: `டிரஸ்ஸிங் ரூமுக்கு Not Allowed' - கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிக்கு தனிக் கட்டுப்பாடு! - காரணம்?

Jun 25, 2026 - 12:01
0
T20: `டிரஸ்ஸிங் ரூமுக்கு Not Allowed' - கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷிக்கு தனிக் கட்டுப்பாடு! - காரணம்?

இளம் வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துப் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் களம் இறங்குவதன் மூலம் புதிய சாதனை படைக்க உள்ளார். 15 வயதே ஆன இந்த இளம் பேட்ஸ்மேனின் சர்வதேச அறிமுகத்தைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.

அதேநேரம், இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் போது, வைபவ் சூர்யவன்ஷி எப்போதும் இந்திய அணியின் பிரதான டிரெஸ்ஸிங் அறையில் இருக்க அனுமதிக்கப்பட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ICC மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் கடுமையான பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

அதாவது சர்வதேச கிரிக்கெட் விதிகளின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அல்லது இளம் வீரர்கள் மற்ற மூத்த வீரர்களுடன் பொதுவான உடைமாற்றும் அறையைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. அவர்களுக்குத் தனி வசதிகள் செய்துகொடுக்கப்பட வேண்டும். இதன் காரணமாக, போட்டி நடைபெறும் ஒவ்வொரு மைதானத்திலும் வைபவ் சூர்யவன்ஷிக்கு என்று பிரத்யேகமாகத் தனி உடைமாற்றும் அறை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கப்பட உள்ளது.

'தி கார்டியன்' நாளிதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வைபவ் சூர்யவன்ஷி போட்டிகள் நடைபெறும் நேரங்களிலும், அணியின் டீம் மீட்டிங் போதும் மட்டுமே இந்திய அணியின் பிரதான உடைமாற்றும் அறைக்குள் இருக்க அனுமதிக்கப்படுவார். மற்ற நேரங்களில், குறிப்பாகப் போட்டிக்கு முன்பும் பின்பும் ஆடை மற்றும் காலணிகளை மாற்றிக்கொள்ளும் போது, அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தனி அறையையே பயன்படுத்த வேண்டும்.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில், ``இது ஐசிசி-யின் விதிகளுக்கு உட்பட்ட தொடர் என்பதால், அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பு நடைமுறைகள் இங்குப் பின்பற்றப்படுகின்றன. மேலும், இங்கிலாந்து வாரியத்தின் 'சேஃப் ஹேண்ட்ஸ்' கொள்கையும் இதில் அமல்படுத்தப்படும்.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

இந்திய அணியின் தொடர்பு அதிகாரியுடன் இதுகுறித்துத் தொடர்ந்து பேசி வருகிறோம். மைதானங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வார்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது 15 வயதே ஆகும் வைபவ், அந்நிய நாட்டுச் சூழலுக்குப் பழகுவதற்காகத் தனது பெற்றோருடன் இந்தத் தொடருக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User