"ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்" - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

Aug 24, 2026 - 09:00
0
"ராசிமணலில் அணை கட்ட தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம்" - பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

"தமிழக அரசு விரைவில் ராசிமணலில் அணை கட்டத் தொடங்க வேண்டும்" என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள ராசிமணல் பகுதியை நேரில் பார்வையிட்ட பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "காவிரியின் குறுக்கே ராசி மணலில் அணை கட்ட அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

2024 ல் ராசிமணல் பகுதியைப் பார்வையிட்டு மைசூரில் ஒன்றாக அமர்ந்து பேசிய கர்நாடக-தமிழக விவசாயிகள் ராசிமணலில் தமிழகம் அணை கட்டிக்கொண்டால் கர்நாடகாவிற்குத் தேவையான குடிநீரை எடுத்துக் கொள்ளலாம்.

இடது கரை காவிரி ஆறு தமிழகத்திற்கும் வலது கரை கர்நாடகாவிற்குச் சொந்தமாகிக் கொள்ளும். எனவே தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்காது என முடிவெடுத்து அன்றைய முதலமைச்சர் சித்தராமையாவிடமும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி சென்னையில் நடந்த தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'மேகதாட்டு அணை கட்டினால் தமிழகத்திற்குத்தான் பயன் அளிக்கும்' எனக் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ராசிமணல் பகுதியில் பி.ஆர்.பாண்டியன் குழுவினர்
ராசிமணல் பகுதியில் பி.ஆர்.பாண்டியன் குழுவினர்

மேகதாட்டில் அணை கட்டினால் கர்நாடக-தமிழக விவசாயிகள் அழிந்து போவார்கள். எனவே தமிழகம் ராசிமணலில் அணை கட்ட கர்நாடக அனுமதிக்க வேண்டுமென கர்நாடக விவசாயிகள் முடிவெடுத்த நிலையில் உண்மைக்குப் புறம்பாக தனது அரசியல் சுயலாபத்திற்காக மேகதாட்டில் அணை கட்ட சட்டவிரோதமாகச் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழகம், புதுச்சேரி, காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் இல்லாமல் விரிவான வரைவு திட்ட அறிக்கை செல்லாது என்பதைத் தெரிந்தும் கர்நாடகா சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறது.

அதுபோல முல்லை பெரியாறுக்கு மாற்றாக தமிழக எல்லையோரம் புதிய அணை கட்டிக்கொள்ள கேரளா அனுமதிப்பதாகவும் அதற்கான செலவினைத் தொகையை கேரளா அரசு ஏற்கும் என மாநில முதலமைச்சர் சதீஷன் தெரிவித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் ஜல் சக்தி துறை செயலாளர் தலைமையிலான குழுவும், உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவும் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அணை வலுவாக இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை கொள்ளளவை 152 அடி உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையைச் சரிபடுத்திக் கொள்ளவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏற்க மறுத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் சதீஷன் பேசுவதை அனுமதிக்க முடியாது.

ராசிமணலைப் பார்வையிட சென்ற எங்கள் வாகனங்களை வனத்துறையினர் அனுமதிக்க மறுத்துவிட்டார். இருசக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்டு வந்தோம். ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்குத் தலா 1000 ரூபாய் பெற்றுக்கொண்டு பார்வையிட அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது.

மேகதாட்டு அணை கட்டுமானத்தைத் தடுத்து நிறுத்திடவும், ராசிமணலில் அணைக்கட்ட வலியுறுத்தியும், ஒகேனக்கலில் பரிசல் இயக்குபவர்களை நலனுக்காகவும் விரைவில் ஒகேனக்கலில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User