CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

Apr 15, 2026 - 13:31
 0
CSK vs KKR: சென்னை மற்றும் கொல்கத்தா வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடியது ஏன்?

ஐபிஎல் 2026, நேற்று (ஏப்ரல்.14) நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது.

மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தாலும், ரசிகர்கள் அனைவரின் கவனமும் வீரர்களின் கையில் கட்டப்பட்டிருந்த அந்த 'கருப்புப் பட்டை' மீதுதான் இருந்தது.

இதற்குப் பின்னால் இந்திய கிரிக்கெட்டின் ஒரு சகாப்தமே அடங்கியிருக்கிறது.

CSK vs KKR match

இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவரான சி.டி. கோபிநாத் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சி.டி. கோபிநாத் மார்ச் 1, 1930 அன்று சென்னையில் பிறந்தார். 1952-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தபோது, அந்தப் புகழ்பெற்ற அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களில் உயிருடன் இருந்த கடைசி நபர் இவர்தான்.

அந்த வரலாற்று வெற்றி சென்னை மண்ணில் நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் தமிழக அணியின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது. தமிழக அணியின் கேப்டனாகப் பணியாற்றிய இவர், தனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் 60 போட்டிகளில் விளையாடி 4,259 ரன்களைக் குவித்துள்ளார்.

குறிப்பாக, 1954-55 சீசனில் மெட்ராஸ் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்றபோது, இறுதிப் போட்டியில் சதம் விளாசி அந்த வரலாற்று வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

CSK vs kkr match

இவர், ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கிரிக்கெட் நிர்வாகத்திலும் வீரர்களைத் தேர்வு செய்வதிலும் இவர் ஆற்றிய பணி இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.

அவர் கடந்த ஏப்ரல் 9, 2026 அன்று தனது 96-வது வயதில் காலமானார். இந்திய கிரிக்கெட்டின் ஆரம்பகால வெற்றிகளுக்குச் சாட்சியாக இருந்த ஒரு ஜாம்பவானை கௌரவிக்கும் வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வீரர்கள் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

இதன் மூலம், கிரிக்கெட் உலகிற்கு அவர் ஆற்றிய ஈடுஇணையற்ற சேவைகளுக்கு பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் தங்களின் மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொண்டன.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0