சென்னை: ரத்த வெள்ளத்தில் வீட்டுக்கு வந்த இளைஞர் - அதிர்ச்சியடைந்த குடும்பம்!

Apr 11, 2026 - 20:01
 0
சென்னை: ரத்த வெள்ளத்தில் வீட்டுக்கு வந்த இளைஞர் - அதிர்ச்சியடைந்த குடும்பம்!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (28). இவர் மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நரேஷ்குமார், மது அருந்தி விட்டு போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரின் உடல் முழுவதும் வெட்டு காயங்கள் இருப்பதைப் பார்த்த நரேஷ்குமாரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நரேஷ்குமாரிடம் என்ன நடந்தது என்று குடும்பத்தினர் விசாரித்தனர். அப்போது அவர் போதையில் உளறினார்.

அதைத் தொடர்ந்து நரேஷ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் நரேஷ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதனால் நரேஷ்குமாரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நரேஷ்குமார் மரணம் குறித்து மருத்துவமனையிலிருந்து தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், நரேஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் நரேஷ்குமார் நேற்றிரவு நண்பர்கள் சிலருடன் மது அருந்தியிருக்கிறார். அப்போது நடந்த மோதலில் நரேஷ்குமாரை அவரின் நண்பர்களே வெட்டியிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி நரேஷ்குமார் வீட்டுக்கு வந்திருக்கிறார். ரத்தம் அதிகளவு வெளியேறியதால் அவர் உயிரிழந்துவிட்டார். அதனால் கொலை வழக்குப் பதிவு செய்த தண்டையார்பேட்டை போலீஸார், நரேஷ்குமாரின் நண்பர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0