"எனது வெற்றியை விட கோவையில் திமுக-வின் வெற்றிதான் முக்கியம்’ – உதயநிதி ஸ்டாலின் சூளுரை

Apr 18, 2026 - 09:31
 0
"எனது வெற்றியை விட கோவையில் திமுக-வின் வெற்றிதான் முக்கியம்’ – உதயநிதி ஸ்டாலின் சூளுரை

கோவை காந்திபுரம் பகுதியில் தி.மு.க வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி மற்றும் செந்தமிழ் செல்வன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பரப்புரை செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ”இந்தித் திணிப்பிற்கு எதிராக ராணுவத்தையே சந்தித்த வீரமும், துணிச்சலும் கொண்ட இளைஞர்களைத் தந்த மண், இந்த கோவை மண். மேற்கு மண்டலத்தை கழகத்தின் கோட்டையாக செந்தில் பாலாஜி மாற்றி வைத்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் உழைப்பைப் பார்த்த பாசிச சக்திகள் இவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். நாடாளுமன்றத்தில் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். ஆனால் சங்கிகளின் கனவு எல்லாம் பொய்யாகி, நாம் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தோம்.

பாசிச கூட்டமும், சங்கிக் கூட்டமும் கோவையை அவர்களுடைய கோட்டை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது திமுகவின் கோட்டை என்பதை செந்தில் பாலாஜி ஒவ்வொரு அசைவிலும் நிரூபித்து கொண்டிருக்கிறார். கரூர் செந்தில் பாலாஜிக்கு பிறந்த வீடு, கோவை புகுந்த வீடு.

பிறந்த வீட்டைப் பார்த்துக்கொண்டது போல, அவர் புகுந்த வீட்டையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கடந்த முறை அளித்த வாக்குறுதியில் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தேர்தலுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்துவதற்கு அ.தி.மு.க, பா.ஜ.க. நினைத்தார்கள். ஆனால் நம்முடைய முதலமைச்சர் முன்கூட்டியே மூன்று மாத மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடை காலச் சிறப்புத் தொகை ஆகியவற்றை கொடுத்தார்.

நம்முடைய முதல்வர் அளித்த மகளிர் உரிமை தொகையை ஒன்றிய அரசு பேங்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி எடுத்து விடுவார்களோ என்ற பயத்தில், நீங்கள் அனைவரும் 9 மணிக்கு அந்த 5 ஆயிரம் ரூபாயை எடுத்து விட்டீர்கள்.

அதேபோல சார்ப்பாக தேர்தல் நாளன்று அதிகாலையே சென்று செந்தில் பாலாஜிக்கு வாக்களித்து விட வேண்டும். வடக்கு தொகுதியில் செந்தமிழ்ச்செல்வனுக்கு வாக்களித்து விட வேண்டும்.

முரட்டு பக்தர்களைப் பார்த்து இருப்பீர்கள். முரட்டு தொண்டர்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் முரட்டு அடிமைகளைப் பார்த்து உள்ளீர்களா? மோடியின் நம்பர் ஒன் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி என்று நான் கூறினேன், அதற்குதான் அவ்வளவு பஞ்சாயத்து.

ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என்று ஏதாவது திட்டங்களைக் கொடுத்துள்ளார்களா? இப்படித்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். எனக்கு இந்த அனுபவம் எல்லாம் கிடையாது” என எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படத்தைக் காண்பித்து விமர்சித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து பேசிய அவர், “எனக்கும் இந்தப் புகைப்படத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் என்னைக் கெட்ட வார்த்தைகளில் மட்டும்தான் அவர் திட்டவில்லை, மற்றபடி செத்துப் போ என்று கூட கூறுகிறார். இந்தத் தேர்தல் டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான போட்டி.

இதில் டெல்லி அணியை நாம் தோற்கடிக்க வேண்டும், தமிழ்நாடு அணியின் நாம் ஜெயிக்க வேண்டும். பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்க வேண்டும். சங்கிக் கூட்டத்தை தமிழ்நாட்டிற்குள் விடக்கூடாது அப்படி விட்டால் நமக்கு டேஞ்சர்.

எனக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வெற்றியை விட கோவையின் வெற்றி மிக மிக முக்கியம். நமது வெற்றி என்பது எதிர்த்து நிற்பவர்களின் டெபாசிட் போகின்ற அளவிற்கு இருக்க வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0