`5 கட்சி அமாவாசை; செந்தில் பாலாஜி அரக்கனை விட கொடூரமானவர்’ – எடப்பாடி பழனிசாமி சாடல்

Apr 16, 2026 - 15:01
 0
`5 கட்சி அமாவாசை; செந்தில் பாலாஜி அரக்கனை விட கொடூரமானவர்’ – எடப்பாடி பழனிசாமி சாடல்

கோவை சித்தாபுதூர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``கோவை தெற்கு தொகுதியில் ஒரு வைரஸ் இருக்கிறது. கொரோனாவிற்குகூட மருத்து இருக்கிறது, அதைத் தாண்டி இந்த வைரஸ் கொடியது. கரூரை முடித்து விட்டு கோவை தெற்கு தொகுதிக்குள் அந்த வைரஸ் நுழைந்து இருக்கிறது. ஒரு மனிதன் சிந்திப்பது முழுவதும் தீய எண்ணம், அப்படிபட்டவர் இந்த தொகுதியில் நிற்கின்றார். நான் அவர் பேரைச் சொல்ல விரும்பவில்லை.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

10 ரூபாய்க்கு அடையாளம் கொடுத்தவர் அவர். கோடு போட்டால் அவர் ரோடு போடுவார் என ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் ரோடே போடாமல் அவர் கொள்ளையடித்து விடுவார். செந்தில் பாலாஜி குறித்து ஸ்டாலின் பேசியதை வீடு வீடாக கொண்டு சென்று காட்டுங்கள். அ.தி.மு.க. மக்களை நம்பி இருக்கிறது, இங்க இருக்கும் வேட்பாளர் பணத்தை நம்பி இருக்கிறார். அவர் அரசியல் வியாபாரி, மக்கள் இவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர் கரூரில் ஏன் நிற்கவில்லை? மக்கள் அவரை நிராகரித்து விட்டனர்.

நான் என் எடப்பாடி தொகுதிக்குள் போகவில்லை, என்னை என் மக்கள் நேசிக்கின்றனர். கரூரில் சுரண்டி முடித்தாகிவிட்டது, கோவை செல்வம் கொழிக்கும் பகுதி, அவர் இங்கு தங்க நகை தொழிலையும் ஆக்கிரமித்து விடுவார். தெற்கு சட்டமன்றத் தொகுதி மக்கள் விழித்துக் கொண்டால், பிழைத்துக் கொள்வீர்கள். மனிதாபிமானம் இல்லலாத ஒருவர் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார், 5 கட்சி அமாவாசை அவர். அரக்கனைவிட கொடூரமானவர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எங்கள் தொண்டரைக்கூட உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. முதலில் இருந்த பழனிசாமி வேறு, இனிமேல் வரும் பழனிசாமி வேறு. கரூரில் எங்கள் கட்சி ஆள் மீது பொய் வழக்கு போடுகின்றீர்கள், ஆட்சி மாறும் போது காட்சி மாறும். அரசு அதகாரிகள் நடுநிலையோடு  நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். அரசு ஊழியர்கள் அதிகாரிகள் தவறான செயலில்  ஈடுபட்டால், உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது. எவராக இருந்தாலும் விட்டு வைக்க மாட்டேன், என்ன நடந்தாலும்  பரவாயில்லை. ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால் உங்கள் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.

இன்று ஸ்டாலின் கருப்பு கொடி காட்டுகின்றாராம். கோவையில் எங்கேயும் கருப்பு கொடியை பார்க்கவில்லை. தேர்தல் தோல்வியால் அவருக்கு  ஜூரம் வந்துவிட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு எந்த விதத்திலும் பாதிக்காது எனச் சொல்லி இருக்கிறார். இவர் நினைப்பதற்கு மேல் அற்புதமாக பாராளுமன்ற தொகுதி மறுவரையரை செய்வார்கள். ஸ்டாலின் டபுள் கேம் ஆடுகிறார், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாதிப்பைச் சந்திக்காத அளவில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மகளிர் இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்துவதை தடுக்க இதை செய்கிறார்.

என்னுடைய கருத்து அதிர்ச்சி அளிப்பதாக ப.சிதம்பரம் சொல்கிறார். நான் நடந்ததைத் தானே சொல்ல முடியும்? உள்துறை அமைச்சர் சொல்லியதை சொன்னேன். ப.சிதம்பரம் எத்தனை வருடம் மத்திய மந்திரியாக இருந்தார்? அவர் தமிழகத்திற்கு என்ன கொண்டு வந்தார்? சிதம்பரத்திற்கு எங்களை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? தமிழகத்தில் இருந்து 39 பேர் எம்.பி.க்களாக வெற்றி பெற்று இருக்கின்றனர். இவர்கள் என்ன விஷயத்திற்காக குரல் கொடுத்து இருக்கின்றனர்?” என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0