`திமுக வெற்றிபெற உதவிய ஜெயலலிதா' - 1989 தேர்தல் களம் சொல்லும் அரசியல் | Vote Vibes

Apr 13, 2026 - 19:03
 0
`திமுக வெற்றிபெற உதவிய ஜெயலலிதா' - 1989 தேர்தல் களம் சொல்லும் அரசியல் | Vote Vibes

தமிழக அரசியல் வரலாற்றில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனை. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க சந்தித்த முதல் தேர்தல். ஆனால், அசைக்க முடியாத சக்தியாக இருந்த அந்த இயக்கம் 'ஜா' அணி (ஜானகி ராமச்சந்திரன்) மற்றும் 'ஜெ' அணி (ஜெயலலிதா) என இரண்டாகப் பிரிந்து நின்றது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவுக்கு இது சாதாரணத் தேர்தல் அல்ல. அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய 'வாழ்வா-சாவா' யுத்தம். ஜானகி அணியில் ஆர்.எம். வீரப்பன் போன்ற ஜாம்பவான்கள் மற்றும் மூத்த தலைவர்கள் இருந்தனர். ஜெயலலிதா அணியில் பெரிய தலைகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. ஆனால், அவர் "எம்.ஜி.ஆர் ரசிகனும் தொண்டனும் என் பக்கமே" என்ற நம்பிக்கையுடன் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார்.

எம்.ஜி.ஆர் -ஜானகி
எம்.ஜி.ஆர் -ஜானகி

பிரசாரக் களத்தில் இரு அணியினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்தனர். ஒருகட்டத்தில், எம்.ஜி.ஆர் மரணத்துக்கு ஜானகிதான் காரணம் என்பதாக ஜெயலலிதா பேசியது பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. உடனடியாக ஆளுநர் பி.சி. அலெக்ஸாண்டர் தலையிட்டு, மருத்துவர்களின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி அந்தப் புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜெயலலிதாவை வீழ்த்த ஜானகி அணி சகல பலத்தையும் திரட்டியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடங்கிய 'தமிழக முன்னேற்ற முன்னணி' ஜானகி அணியை ஆதரித்தது. போடிநாயக்கனூர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட, அவருடன் சினிமாவில் அறிமுகமான நடிகை 'வெண்ணிற ஆடை' நிர்மலாவை ஜானகி அணி களமிறக்கியது.

இந்தத் தேர்தலில் தி.மு.க, ஜெயலலிதா அணி, ஜானகி அணி, காங்கிரஸ் என நான்குமுனைப் போட்டி நிலவியது. எம்.ஜி.ஆர் மீது அனுதாப அலை இருந்தபோதிலும், கட்சி இரண்டாகப் பிரிந்து நின்றதை பாமரத் தொண்டர்கள் ரசிக்கவில்லை.

கலைஞர் மு.கருணாநிதி
கலைஞர் மு.கருணாநிதி

ஜெயலலிதா அணி 27 இடங்களைக் கைப்பற்றி அ.தி.மு.க-வின் உண்மையான வாரிசு தான்தான் என்பதை நிரூபித்தது. முன்னாள் முதல்வர் ஜானகி ஆண்டிப்பட்டியிலும், சிவாஜி கணேசன் திருவையாற்றிலும் படுதோல்வி அடைந்தனர். அ.தி.மு.க-வின் இந்த பிளவும், ஜெயலலிதாவின் பிடிவாதமும் 12 ஆண்டுகளாக அதிகாரத்திற்காகக் காத்திருந்த தி.மு.க-வுக்குச் சாதகமாக அமைந்தது. கருணாநிதி தலைமையில் தி.மு.க மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வகையில், தி.மு.க-வின் வெற்றிக்கு ஜெயலலிதா முக்கியக் காரணியாக அமைந்தது அரசியல் களத்தில் நிரூப மறுக்க முடியாத உண்மை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0