’அண்ணனைத் தொடர்ந்து களத்திற்கு வந்த தம்பி’ – வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரிக்கும் மகன்கள்

Apr 14, 2026 - 11:33
 0
’அண்ணனைத் தொடர்ந்து களத்திற்கு வந்த தம்பி’ – வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரிக்கும் மகன்கள்

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனுக்குத் தேர்தல் பரப்புரையின் இடையே திடீரென கால் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதன் காரணமாக வானதி சீனிவாசன் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால், வானதி சீனிவாசன் இறுதிக்கட்ட பரப்புரைகளில் மட்டுமே பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லாமலேயே, பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கோவை வடக்கு தொகுதிக்குள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணாமலை உடன் ஆதர்ஷ்
அண்ணாமலை உடன் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ்

குறிப்பாக வானதி சீனிவாசனின் மூத்த மகன் ஆதர்ஷ் கடந்த சில நாட்களாக, கோவை வடக்கு தொகுதியில் நடைபெறும் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இணைந்து வீடு, வீடாக சென்று வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முதல் வானதி சீனிவாசனின் இளைய மகன் கைலாஷ், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சங்கனூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கைலாஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது தனது தாயின் உடல் நிலை குறித்தும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகளையும் கூறி கைலாஷ் ஆதரவு திரட்டினார். மேலும், ”அம்மா விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்காக வருவார். அதுவரை அவரது பிரதிநிதியாக நான் உங்கள் கதவுகளை தட்டுகிறேன்” என கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0